![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yercaud Flower Show: ஏற்காட்டில் 46 வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி... இன்று மாலை தொடக்கம்..!
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 21-ஆம் தேதி (இன்று) தொடங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது.
![Yercaud Flower Show: ஏற்காட்டில் 46 வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி... இன்று மாலை தொடக்கம்..! The 46th Summer Festival and Flower Show at Yercaud is set to begin this evening Yercaud Flower Show: ஏற்காட்டில் 46 வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி... இன்று மாலை தொடக்கம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/21/30a3b226d84b8b3eab95c4606cebed8f1684651869174189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 21-ஆம் தேதி (இன்று) தொடங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை 21.05.2023, இன்று மாலை 5 மணிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் கலந்துகொண்டு 46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.
குறிப்பாக, இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 இலட்சம் அரிய வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மேலும், மலர் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது. மலர்க்கட்காட்சி நடைபெறும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. முன்னதாக இன்று காலை 7 மணிக்கு ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள குதிரைத்தடம் பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் மலையேறும் நடைப்பயணம் தொடங்கியது.
ஏற்காடு மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் 8 நாட்களுக்கு சேலம் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை ஏறுவதற்கு மட்டும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள் சேலம் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையை இருவழி பாதுகாக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக இறங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி எட்டு நாட்கள் நடைபெற உள்ளதால் ஏற்காட்டில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கோடை விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்காடு கோடை விழா நடைபெற உள்ளதால் சேலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)