அப்பாடா.. ஒருவழியாகத் திறந்தாச்சு - சேலத்தை அதிரவைத்த மதுபிரியர்களின் மெகா கியூ வரிசை
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

சேலத்தில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டதால் மதுக்கடைகள் முன்பு ஏராளமான மது பிரியர்கள் குவிந்தனர்.
காலி மது பாட்டில்களை வெளி முகமை மூலம் திரும்பப்பெற வேண்டும், மதுபான கடைகளில் உடைகின்ற பாட்டில்களுக்கு இழப்பீட்டினை நிர்வாகமே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் மது பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் மற்றும் மாவட்ட மேலாளர் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடைகள் திறந்த உடனே மது பிரியர்கள் கடை முன் குவிய தொடங்கினர். குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாததால் தாங்கள் அவதிக்குள்ளானதாகவும், மது பிரியர்கள் மது இல்லாமல் தூங்க முடிவதில்லை, கூடுதலாக பத்து ரூபாய் தற்போது வாங்குவதில்லை எம்ஆர்பி விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஒருவேளை கூடுதலாக பணம் கேட்டாலும் நாங்கள் தர தயாராக இருக்கிறோம் ஆனால் மது கடையை மட்டும் மூட வேண்டாம் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலியால் சேலத்தில் நேற்று தனியார் பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. மது பிரியர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (மனமகிழ் மன்றம்) பாரில் திரளான மது பிரியர்கள் வந்து கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். வழக்கமாக சேலத்தில் உள்ள பல்வேறு 11 டூ 11 பார்களிலும் மது வகைகள் விற்கப்பட்டு வருகிறது. இந்த 11 டூ 11 பார்கள் பகல் 11 மணிக்கு திறந்து இரவு 11 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் சேலம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பார்களிலும் மற்றும் 11 டூ 11 பார்களிலும் அதிகம் கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















