![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 10,099 கனஅடியில் இருந்து 879 கன அடியாக சரிவு
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 14,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
![Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 10,099 கனஅடியில் இருந்து 879 கன அடியாக சரிவு Salem news Mettur Dam water inflow dropped from 10,099 cubic feet to 879 cubic feet TNN Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 10,099 கனஅடியில் இருந்து 879 கன அடியாக சரிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/01/a43ce0cc55e08ce8011141e59facf7f11690860273446113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 13,104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 10,099 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 879 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 63.86 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 27.64 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இது படிப்படியாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் உள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.24 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.69 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,278 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.85 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.65 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 6,759 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)