'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
ஆத்தூர் நகராட்சி துப்புரவு பணிகளுக்கு பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: ஆத்தூரில் நகராட்சி தூய்மை பணிகளுக்கு 100 ரூபாய் பத்திரத்தில் தொழிலாளர்களிடம் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறையை தனியார் நிறுவனம் புதிதாக அரங்கேற்றியுள்ளது. இந்தப் பிரச்சனையில் அரசு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு துறையூர் பகுதியை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தூய்மை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அந்த நிறுவனம் கொத்தடிமைகளை போல பத்திரத்தில் எழுதி வாங்கும் வினோதம் அரங்கேறி வருகிறது.
தனியார் நிறுவனத்தை சேர்ந்த கண்காணிப்பாளராக உள்ள அருண் என்பவர் 100 ரூபாய் பத்திரத்தில் தூய்மை பணி செய்ய வரும் பணியாளர் அரசின் எந்த சலுகையும் கேட்கக் கூடாது. குறிப்பாக நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் இஎஸ்ஐ, பிஎப் போன்றவற்றை கேட்கக்கூடாது. பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டம் நடத்தினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கே கட்டுப்பட்டு பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என 100 ரூபாய் பத்திரத்தில் தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கி கொத்தடிமைகளைப் போல் மாற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலம் பணியாற்றினால் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் சங்கங்கள் மூலம் அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டு அதன் பிறகு தீர்வு காணப்பட்டு வரும் நடைமுறையை மாற்றி மீண்டும் பழைய கொத்தடிமை முறையை இந்த நிறுவனம் புகுத்தி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனது. வேறு வழி இல்லாமல் சில பணியாளர்கள் 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு செல்லும் நிலையும் உள்ளது. எனவே, தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை முழுமையாக கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















