மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பரிசல் பயணத்தில் கட்டணக் கொள்ளை.. தவிக்கும் சுற்றுலா பயணிகள்.. ஒகேனக்கல்லில் இருந்து ஒரு ரிப்போர்ட்
பரிசல் பயணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு ரூ.150, பரிசல் ஓட்டுபவர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.
![பரிசல் பயணத்தில் கட்டணக் கொள்ளை.. தவிக்கும் சுற்றுலா பயணிகள்.. ஒகேனக்கல்லில் இருந்து ஒரு ரிப்போர்ட் Hogenakkal Tourists keeps complaing on the local Boat service renderers hikes the charge of tourist service more than government limit பரிசல் பயணத்தில் கட்டணக் கொள்ளை.. தவிக்கும் சுற்றுலா பயணிகள்.. ஒகேனக்கல்லில் இருந்து ஒரு ரிப்போர்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/c399ff8dd7568d73011d72dd88c550f6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒகேனக்கல்
ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு மேல் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி பகுதியாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்கள் ஒகேனக்கல்லில் ஆயில் மசாஜ், அருவிகளில் குளியல், அருவியின் அழகை கண்டு ரசிக்க பரிசல் பயணம் என பொழுதை கழிக்கின்றனர்.
![பரிசல் பயணத்தில் கட்டணக் கொள்ளை.. தவிக்கும் சுற்றுலா பயணிகள்.. ஒகேனக்கல்லில் இருந்து ஒரு ரிப்போர்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/8e402f7f710b4acef0d591f293e8f3ff_original.jpg)
கோடை காலங்களான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும். மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை நம்பி பரிசல் ஓட்டிகள், மசாஜ், சமையல், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறுவியாபாரிகள் என 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பரிசல் பயணமானது ஐந்தருவி, மணல்மேடு, மாமரத்து கடவு மற்றும் தண்ணீர் தேக்கமடைந்துள்ள காலங்களில் சின்னாறு, கூத்துக்கள், மெயினருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் ஒரு பரிசலில் 4 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு உடை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.
இங்கு பரிசல் பயணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு ரூ.150, பரிசல் ஓட்டுபவர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அரசு விதித்த கட்டணம் தவிர்த்து கூடுதலாக ரூ.500 முதல் ரூ.2000 ரூபாய் வரை பரிசல் ஓட்டிகள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
![பரிசல் பயணத்தில் கட்டணக் கொள்ளை.. தவிக்கும் சுற்றுலா பயணிகள்.. ஒகேனக்கல்லில் இருந்து ஒரு ரிப்போர்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/b319f10657c1677623266c35c6c585aa_original.jpg)
அதாவது வரையறுக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து கூடுதலாக ஐந்தருவி, மாமரத்துக் கடவு, கர்நாடக எல்லை போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாகவும், சினி அருவியில் காத்திருந்து குளிக்க வைத்து அழைத்து வருவதாகவும் கூறி ரூ.2000 வசூல் செய்கின்றனர். கூடுதல் கட்டணம் கொடுக்க சுற்றுலா பயணிகள் விருப்பமில்லை என்று தெரிவித்தால் பரிசல் வருவதில்லை என தெரிவிக்கின்றனர்.
இதனால் ஏமாற்றம் அடையும் சுற்றுலாப் பயணிகள் வேறுவழியில்லாமல் பேரம் பேசி 1000, 1500 என கொடுத்துவிட்டு பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்ற ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டும் அனைத்து பரிசல் ஓட்டிகளும் கட்டணம் கூடுதலாக வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இதுபற்றி சுற்றுலாப் பயணிகள் கேட்டால் எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக் கொள்ளுங்கள். நாங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டோம் எனவும் கூறுவதாக சுற்றுலாப் பயணிகள் குமுறுகின்றனர்.
மேலும் ஒரு பரிசலில் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என அரசு கட்டுப்பாட்டை மதிக்காமல் கூடுதலாக பணம் வசூல் செய்து கொண்டு 5, 6 பேர் என பரிசலில் அழைத்துச் செல்கின்றனர். ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகளும் பரிசலில் பயணம் செய்கின்றனர். ஏற்கனவே பரிசல் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அரசு சார்பில் பரிசல் பயணத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பு உடை தரம் இல்லாமல் பரிசல் பயணம் செய்வதற்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது.
எனவே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கட்டணம் வசூல் செய்யும் பரிசல் ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசல் பயணத்திற்கு கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் பரிசலில் அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதற்கும், உரிய பாதுகாப்பு உடைக்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பரிசல் ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்க, புகார் எண்கள் 9360555627, 8508502885 கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion