தங்கம் விலை போல, நாள்தோறும் கொலை நிலவரம் - திமுகவை கடுமையாக சாடிய இபிஎஸ்
திமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் அதிகரிப்பு, சட்ட ஒழுங்கு சீரழிவு ஏற்பட்டு தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மடைமாற்றுவதற்காகத்தான் தொகுதி மறுவரையறைக் கூட்டத்தை திமுக நடத்தியிருக்கிறது- இபிஎஸ்

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 2025-2026 ஆண்டிற்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு கண்துடைப்பு நாடகமாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சிக்கு இன்னும் 10 மாதம் தான் உள்ளது. 10 மாதத்தில் புதிய திட்டங்கள் நிறைவேற்ற முடியாத நிலைதான் உள்ளது. ஏனென்றால் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கி ஒப்பந்தம் கோரப்பட்டு பணி தொடங்குவது இயலாத காரியம். இப்போது அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களாகத்தான் பார்க்கப்படுகிறது என்றார்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை மின் கட்டண உயர்வு, சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு என எல்லா வகையிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டு காலம் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளை மறைப்பதற்காக தொகுதி வரையறை என்ற நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். திமுக எம்.பி.க்கள் இதற்காக நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தியபோது அதில் காங்கிரஸ் எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களும் கலந்து கொண்டிருந்தால், தொகுதி வரையறை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சி பலன் அளிக்கும் என நினைக்கலாம். ஆனால் நேற்றைய தினம் பல்வேறு கட்சித் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்களை அழைத்துப் பேசியது, திமுக ஆட்சியின் லஞ்ச ஊழல் அதிகரிப்பு, சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிவு ஏற்பட்டு தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மடைமாற்றுவதற்காகத்தான் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதைத்தான் அந்தக் கூட்டம் பிரதிபலிக்கிறது என தெரிவித்தார்.
சட்டசபையில் எதைப் பேசினாலும் காட்டுவதில்லை. ஊடகத்தினரும் எங்களை காட்டுவதில்லை. பேட்டி கேட்கிறீர்கள். நாங்களும் சொல்கிறோம். எங்களைப் பொருத்தவரை மக்களின் பிரச்சினைகளைத் தான் சொல்கிறோம். தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்வதில்லை. அமலாக்கத்துறை மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் திமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. நாங்கள் சொன்னது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கலால் துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது.
சசிகலா, ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்காக பாரதிய ஜனதாக் கட்சி அழுத்தம் கொடுப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீங்களாக ஒரு கற்பனை செய்து கொள்கிறீர்கள். காது, மூக்கு, கண் வைத்து தினந்தோறும் அதிமுக பற்றி செய்தி வந்து கொடுப்பதில் ஊடகத்தினர் சளைத்தவர்கள் இல்லை. நீங்களாக எழுதி வருகிறீர்கள். 100 சதவீதம் அப்படி அல்ல. நாங்கள் சொல்லி விட்டோம். அதிமுகவை பொறுத்தவரை மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கம். நீங்கள் சொன்ன நபர்கள் எல்லாம், யாரும் இந்த இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதாக இன்றைக்கு வரைக்கும் அந்த திட்டம் ஏதுமில்லை. எதிர்காலத்திலும் வாய்ப்பில்லை. எதுவுமே கிடையாது. கட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எதற்கு அதெல்லாம் தேவை என்று கூறினார்.
மாநிலங்களவைத் தேர்தலை பொறுத்தவரை இதுவரை தேர்தலே அறிவிக்கவில்லை. அறிவிப்பு வந்த பிறகு நாங்கள் அதைப்பற்றி சொல்வோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எங்களை அணுகவில்லை. நாங்களும் பேசவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கூட்டணி குறித்து சொல்ல முடியும். தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக மாற்று கொள்கை கொண்டவர்களுடன் கூட்டணி வைக்கப்படுகிறது. திமுகவைப் போல நிரந்தர கூட்டணி யாரும் வைப்பதில்லை. ஒரே கொள்கை எனில் எதற்கு 7 கட்சி கூட்டணி. திமுக கூட்டணிக் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளை எதுவும் பேசுவதில்லை. சட்டம் ஒழுங்கு சீரழிவு, கொலை கொள்ளை குறித்தும் பேசுவதில்லை. நாள்தோறும் தங்கம் விலை நிலவரம் போல, கொலை நிலவரம் என்ன என்பது குறித்துத்தான் நாங்கள் பேசுகிறோம். அரசின் மீது வீண் குற்றம் சுமத்துவதில்லை. இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என்பதற்காகவே அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தேசிய நெடுஞ்சாலையில் மனைவியுடன் காரில் சென்றவர் கொலை, திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் கொலை என நாள்தோறும் கொலை சம்பவங்கள் நடக்கிறது. உயிருக்கு ஆபத்து என்று சொன்னபிறகும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்துத்தான் செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருந்தால் கொலையை தடுத்திருக்கலாம். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சியில் இன்றைக்கு உயிரோடு இருக்கிறோம். நாளைக்கு இருக்கிறோமா என்பது தெரியாது என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது. அதனால்தான் அதிமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு இஷ்டம் இல்லை. அதனால் ஏதேதோ காரணம் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் சட்டம் செல்லும்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஏன் செல்லாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு மனசில்லை. ஆர்வம் காட்டவில்லை. இதில் யாரும் ஏமாற்ற முடியாது. யாருக்கும் சாதக பாதகம் இல்லை. யாரையும் பழிவாங்கவோ, ஏமாற்றும் எண்ணம் இல்லை என்று கூறினார்.
2021-ம் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 15 சதவீத வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர் சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சி வந்தபிறகு சாத்தியக்கூறுகளை பார்த்து அறிவிப்போம். மக்களுக்கு எது நல்லதோ அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். நிதிநிலைமையை கருத்தில் கொண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

