மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
90 ஆண்டுகளாக விவசாயம்; தடுக்கும் வனத்துறை - புலம்பும் தருமபுரி விவசாயிகள்
தருமபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த காவிரி ஆற்றங்கரையோரம், மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் 90 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
![90 ஆண்டுகளாக விவசாயம்; தடுக்கும் வனத்துறை - புலம்பும் தருமபுரி விவசாயிகள் Dharmapuri news case registered against those who have been farming in the reservoir area of Mettur Dam for a long time, and the forest department has stopped them from farming TNN 90 ஆண்டுகளாக விவசாயம்; தடுக்கும் வனத்துறை - புலம்பும் தருமபுரி விவசாயிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/10/9e86fc27a6cf0048bfb724c0cba3e9281696931546423113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவிரி ஆறு
தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் காலகாலமாக விவசாயம் செய்து வந்தவர்களை, வனத்துறையினர் விவசாயம் செய்ய கூடாது என தடுத்து வழக்கு பதிவு செய்வதாக புகார் தெரிவித்தனர்.
குடகு மலையில் உருவாகின்ற காவிரி ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் வழியாக பூம்புகாரில் கடலில் கலக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் பெரிய அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கினால், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நாகமரை, பண்ணவாடி, ஒட்டனூர், ஏமனூர், லிங்காபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்றபட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கும். இதனால் மேட்டூர் அணை முழுவதும் தண்ணீர் நிரம்பினால், இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கும்.
இந்நிலையில் நாகமரை, பண்ணவாடி, ஒட்டனூர், கோட்டையூர், லிங்காபுரம், ஏமனூர் உள்ளிட்ட தருமபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள மக்கள், தண்ணீர் தேங்கும் பொழுது அதில் மீன்பிடிப்பதும், தண்ணீர் வற்றினால் இந்த பகுதிகளில் சிறு விவசாயம் செய்து வருகின்றனர். இதில், கம்பு, சோளம், ராகி, கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்கின்றனர். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த காவிரி ஆற்றங்கரையோரம், மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் 90 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து 5 ஆண்டுகள் மேட்டூர் அணையில் தண்ணீர் முழுவதுமாக இருந்து வந்ததால், இந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி வந்தது.
![90 ஆண்டுகளாக விவசாயம்; தடுக்கும் வனத்துறை - புலம்பும் தருமபுரி விவசாயிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/10/413cb37b752ff09802b330e1a452974b1696931790734113_original.jpg)
தற்பொழுது பருவமழை பொய்த்துப் போனதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற தண்ணீர் வழங்கப்படாததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 30 அடியாக குறைந்துள்ளது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் பின்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் வற்றியதால், விவசாயம் செய்வதற்கு இந்த பகுதியில் உள்ள மக்கள் தொடங்கியுள்ளனர். இதில் ஒட்டனூர் முதல் ஏமனூர் வரை சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலம் என கூறி வனத்துறையினர் விவசாயம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி வந்துள்ளனர். மேலும் விவசாயம் செய்ய செய்தால், டிராக்டர் மற்றும் ஏர் கலப்பைகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் காவிரி ஆற்றங்கரை வரும் பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை எடுத்து வனத்துறையினரிடம் விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் சந்தித்து, காலகாலமாக விவசாயம் செய்து வந்த இடத்தில் தங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். வனத்துறைக்கு சொந்தமான நிலமாக இருந்தாலும் கடந்த 90 ஆண்டுகளாக, மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். இங்கு மூன்று மாத காலம் மட்டுமே பயிர் செய்து அறுவடை செய்து கொள்வோம். தண்ணீர் வந்தால் மீன்பிடிப்போம், தண்ணீர் வற்றினால் விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம். இதற்கு வனத்துறை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதற்கு அனுமதிக்காமல் இருந்து வருகின்றனர்.
![90 ஆண்டுகளாக விவசாயம்; தடுக்கும் வனத்துறை - புலம்பும் தருமபுரி விவசாயிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/10/b7c46d44b7318e1beba3c8fe352f86ec1696931821751113_original.jpg)
மேலும் சேலம் மாவட்ட எல்லையில் உள்ள விவசாயிகள் வழக்கம் போல் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொண்டு, தற்பொழுது அறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகின்றனர். அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் நாகமரை பண்ணவாடி பகுதிகளில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் ஒட்டனூர் முதல் ஏமனூர் வரை சுமார் 600 ஏக்கர் பரப்பளவு மட்டும் விவசாயம் செய்வதற்கு தடுத்து வருகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர் வரை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை இவர்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை. எனவே வழக்கம்போல் மேட்டூர் அணையை நீர்த்தேக்க பகுதியில் விவசாயம் செய்த விவசாயிகளை வனத்துறையினர் தடுக்காமல், விவசாயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இந்த இடத்தில் சாலை அமைப்பதற்கோ வீடு கட்டுவதற்கு ஆக்கிரமிக்கவில்லை சிறிய விவசாயம் செய்து வாழ்வதற்கான மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என மேட்டூர் அணை நீர் திறக்கப் பகுதியில் உள்ள விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இது வனத்துறைக்கு சொந்தமான பகுதி என்பதால், விலங்குகளின் வலசை போதல் பாதையாக இருக்கிறது. இங்கு மக்கள் நடமாட்டம், விவசாயம் செய்து வந்தால், வனவிலங்குகள் விவசாய பயிர்களை அழிப்பது, கால்நடைகளுக்கு பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் இங்கு வன உரிமை சட்டத்தின் படி விவசாயம் செய்ய அனுமதிக்க முடியாது என வனத்துறை அமைச்சருக்கு, தருமபுரி மாவட்ட வனத்துறை சார்பில் கடிதம் கொடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion