கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்... காரணம் இதுதான்
தமிழகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படையும். இதனால் அரசுக்கு 200 முதல் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறு கனிமங்கள் மீதான நில வரியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக முழுவதும் கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கிரஷர் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறு கனிமங்களின் மீது நிலவரி விதிக்கப்பட்டுள்ளதால் கனிமத்தின் மீதான வரி 180 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. இதனால் எம் சாண்ட் மற்றும் ஜல்லி உற்பத்தியாளர்கள் வரி உயர்வு திரும்ப பெற வலியுறுத்தியும் பலமுறை வலியுறுத்தியும் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காததால் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்டத்தில் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழக அரசின் இந்த வரி உயர்வாள் ஜல்லி மற்றும் எம் சென்ட் ஒரு யூனிட்டிற்கு 1500 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இதனால் தனியார் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்தனர். கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகும். இதன் மூலம் அரசுக்கு 200 முதல் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லி மற்றும் எம் சாண்ட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

