எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் - முத்தரசன்
பாரதிய ஜனதா கட்சிக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது எதற்கு அமித்ஷாவை சந்தித்தார் இரண்டு மணி நேரம் பேசி இருக்கிறார்கள் என்றும் விமர்சனம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழுவின் 25 வது மாநாடு சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சேலத்தில் மாவட்ட மாநாடு நடத்தி இருக்கிறோம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சேலம் மாநகராட்சி பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இனி தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். பட்ஜெட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். அரசு தொகுப்பு வீடுகள் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, அகில இந்திய விவசாயிகள் மாநாடு நாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் 15 மற்றும் 16, 17 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதில் மாநில அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள் விவசாயிகளுக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது. அறிவிக்கப்படாத போர் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 22 மொழிகளும் சமமாக பாவிக்க வேண்டும். இந்தியை திணிக்க கூடாது குழு பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானித்து கல்விக் கொள்கை நிறைவேற்றப்பட உள்ளது என கூறுகிறார்கள் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மிக மோசமான தேர்வு முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது மொழியாக இந்தியை அறிவிக்கவில்லை என கூறுகிறார்கள் மூன்றாவது ஒரு மொழியை ஏற்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இது சரியல்ல முறையும் அல்ல தமிழ்நாட்டிற்கு தேவையான கல்வி நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருக்கிறார்கள். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 848 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். அதன்படி நடக்கிறார்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழகம் பாதிக்கும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவரும், அவருடன் நிர்வாகிகள் சிலரும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றோம் என்று கூறுகிறார். உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன தேர்தல் பற்றி பேசவில்லை என்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசியதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். ஆனால் கல்யாண தேதி எப்போது என்று மட்டும் கூறவில்லை என விமர்சித்தார்.
பாரதிய ஜனதா கட்சிக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது எதற்கு அமித்ஷாவை சந்தித்தார் இரண்டு மணி நேரம் பேசி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த நிர்பந்தம், என்ன நெருக்கடி எனத் தெரியவில்லை மெல்ல மெல்ல உண்மை வெளிவரும். பலிபீடத்தில் சாய்ந்திருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று கூறினார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

