Thirumavalavan: ”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
Thirumavalavan VCK: அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சிகள் நடந்ததாக தனக்கும் தகவல் கிடைத்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan: தவெக உடன் திரைமறைவில் எந்த பேரத்தையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை என, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக்க முயன்றதாக தகவல் - திருமாவளவன்
திமுக - அதிமுக இணைந்து திருமாவளவனை முதலமைச்சராக முயன்றதாகவும், அதனை முறியடித்தது காங்கிரஸ் தான் என்றும் ஒரு தகவல் வெளியானது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கேள்வி எழுப்பியபோது, “காங்கிரஸ் அதில் எந்தவகையில் தலையிட்டது என எனக்கு தெரியாது. அதிமுக, திமுக மற்றும் அந்த கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இணைந்து, என்னை முதலமைச்சராக்கும் முயற்சியை மேற்கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அதற்கு நாங்கள் இணங்கவில்லை. எங்களை சிலர் அணுகினார்கள். ஆனால் நாங்கள் அதற்கு உடன்படவில்லை.
முடிவை அறிவிக்க தாமதம் ஏன்?
இடதுசாரிகள் எடுத்த முடிவுகள் அடிப்படையில் எங்கள் உயர்நிலை குழுவில் விவாதித்து இறுதி முடிவை எடுத்தோம். அதனை தாமதமான முடிவு என்று விமர்சிக்கிறார்கள். அரசியல் கட்சியை நடத்துகிறவர்களுக்கு தான், முடிவெடுப்பதில் உள்ள சிரமம் புரியும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முடிவு எடுக்க முடியாது. ஆதரவளிக்கலாமா? வேண்டாமா? என்பதிலேயே குழப்பம் நிலவிய நிலையில், அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும். இதை அறியாமல் நாங்கள் திரைமறைவில் பேரம் பேசியதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆதரவளிக்கலாமென முடிவெடுத்த பிறகு, அமைச்சரவையில் இடம்பெறுவதா? வேண்டாமா? என்பது குறித்த ஆலோசனை தான் 11 மணிக்கு மேல் நடைபெற்றது. அதனால் தான் முடிவினை அறிவிக்க தாமதமானது.
எங்கள் வலிமையை உணர்ந்து, பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து சூழலுக்கு ஏற்ப இந்த முடிவை நாங்கள் எடுத்து இருக்கிறோம். வெறும் பதவி மற்றும் அதிகாரம் என்ற அடிப்படையில் உடனே ஒரு முடிவை எடுத்துவிட முடியாது. இந்த முடிவு என்பது மிகப்பெரியது. பதவிக்காக மட்டுமாக இல்லாமல், எதிர்காலத்திற்கான நிலைப்பாட்டையும் பரிசீலித்து தான் முடிவை எடுக்க முடியும்” என திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெறுவாரா திருமாவளவன்?
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா? என்ற கேள்விக்கு, “அதுதொடர்பாக இன்னும் என்னிடம் வலியுறுத்தி கொண்டு தான் உள்ளனர். முதலமைச்சர் விஜய் இன்று என்னை மரியாதை நிமித்தமாக சந்திக்க வருகிறார். அவரிடம் எந்த கோரிக்கையையும் நான் விடுக்கமாட்டேன்” என திருமா தெரிவித்தார். தொடர்ந்து விசிக வெளியில் இருந்து தான் ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைக்கு திமுக தான் தள்ளியதா என கேள்வி எழுப்பியபோது, “திமுக என்பது யாரோ கிடையாது. அவர்கள் எங்கள் கூட்டணி தான். அந்த கூட்டணியில் இருந்து போட்டியிட்டு தானே இரண்டு இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே அவர்கள் சொன்ன ஒரு கருத்தை உடனே புறந்தள்ளிவிட முடியாது அல்லவா? எனவே அவர்கள் கொடுக்கும் பரிந்துரையை தூக்கி எறிந்துவிட முடியாது. குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக எங்களது ஆதரவை வழங்கி இருக்கிறோம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்






















