Thirumavalavan: ”எல்லாமே கிசுகிசுப்பு, முணுமுணுப்பு தான்..அதிகாரப்பூர்வமாக பேசவில்லை” - திருமாவளவன் விளக்கம்
VCK Thirumavalavan: திமுக - அதிமுக தொடர்பாக என்னிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை என, விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

VCK Thirumavalavan: யாரிடமும் பேரம் பேசவில்லை, நாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் உறுதிபட பேசியுள்ளார்.
திருமாவளவனால் வெடித்த சர்ச்சையும் - விளக்கமும்..
விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாகவும், முதலில் எடப்பாடி பழனிசாமியையும், பின்னர் தன்னையே பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதாகவும்” பேசியுள்ளார். இதனால் இரண்டு வருடங்களுக்கு முன்பாக தோன்றிய கட்சிக்காக, சுமார் அரைநூற்றுண்டு காலமாக பரம எதிரியாக இருந்த இரண்டு கட்சிகள் இணைய முயன்றது பெரும் பேசுபொருளானது. தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்காகவே திருமா இப்படி இல்லாத விஷயங்களை எல்லாம் பேசி வருகிறார் என திமுகவினரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் அந்த பேட்டி தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
”அதிகாரப்பூர்வமாக என்னை அழைக்கவில்லை”
சர்ச்சைகள் தொடர்பாக பேசுகையில், “தவெக ஆதரவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபோதே திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என அறிவித்து இருந்தேன். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். கடைசி நேரத்தில் கூட என்னை முதலமைச்சராக்குவதாக வந்த அழைப்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்ததாக நான் கூறவே இல்லை. யாரு என்னுடைய நலம் விரும்பிகள் பேசி இருக்கலாம். இடைதரகர்கள் பேசியிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் நடக்க தானே செய்யும். குறிப்பிட்ட தலைவர் என்னிடம் பேசினார் என நான் சொல்லவே இல்லை. இதெல்லாம் கிசுகிசுப்புகளாகவே என்னிடம் வந்தன. அதன் அடிப்படையிலேயே நான் பேசினேன். பேட்டியில் சொன்னதெல்லாம் கூட கிசுகிசுப்புகள் அடிப்படையிலானது மட்டுமே.
யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை - திருமா
நாங்கள் இப்படி ஒரு முடிவெடுப்போம். அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என எந்த தரப்பில் இருந்தும் எனக்கு தகவல் வரவில்லை. ஏன் ஒரு தலித் முதலமைச்சர் ஆகக்கூடாது என சில நலம் விரும்பிகள் எடுத்த முயற்சி தான் இவை. எங்கள் கட்சி பொதுச்செயலாளர் கூட ஒரு ட்வீட் போட, அதுதொடர்பாக பலர் என்னிடம் பேசினர். ஆனால் அது ஒரு சரியான அணுகுமுறை இல்லை என நான் தெரிவித்தேன். ஆரம்பத்திலேயே திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம் என முடிவெடுத்துவிட்டோம். கட்சிக்கும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்குள்ளாகவே, வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாகவும், பேரம் பேசுவதாக அவதூறுகளை பரப்புவது என்ன நியாயம்.
தலித் முதலமைச்சராக முடியாது - திருமா
இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு நாங்கள் எங்கும் பேரம் பேசவில்லை. அந்த அளவிற்கு தவெகவில் யாருடனும் எங்களுக்கு அணுகல் இல்லை. குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவு அளித்தோம். தவெக ஆட்சியில் அங்கம் வகிக்க மாட்டோம். பாஜக ஆதரவு கட்சி என தவெகவை விமர்சித்துள்ளேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராவது எளிதல்ல” என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















