உ.பி.தேர்தல்: "திரை வாழ்க்கை வேறு; அரசியல் வேறு" - காங்கிரஸ் வேட்பாளரும் மாடலுமான அர்ச்சனா கௌதம்!
மிஸ் பிகினி 2018 இல் நான் இந்தியாவின் சார்பாக போட்டியிட்டேன். நான் மிஸ் உத்தரபிரதேசம் 2014 மற்றும் மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018 ஆகிவற்றை வென்றுள்ளேன்.

வரவிருக்கும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஹஸ்தினாபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் நடிகையும் மாடலுமான அர்ச்சனா கௌதமின் பிகினி புகைப்படங்களை பரப்பி எதிர்க்கட்சியினர் வேலை செய்து வருவதால், திரைத்துறையில் தனது தொழிலை அரசியல் வாழ்க்கையுடன் இணைக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தனது ‘லட்கி ஹூன் லக் சக்தி ஹன்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 50 பெண் வேட்பாளர்களை உள்ளடக்கிய 125 வேட்பாளர்களின் முதல் பட்டியலை சட்டமன்றத் தேர்தலுக்கு வெளியிட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நவம்பர் 2021 இல் காங்கிரஸில் இணைந்த அழகிப் போட்டி வெற்றியாளர் அர்ச்சனா கெளதமின் பிகினி படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. "மிஸ் பிகினி 2018 இல் நான் இந்தியாவின் சார்பாக போட்டியிட்டேன். நான் மிஸ் உத்தரபிரதேசம் 2014 மற்றும் மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018 ஆகிவற்றை வென்றுள்ளேன். திரை மற்றும் மாடலிங் துறையில் எனது தொழிலை எனது அரசியல் வாழ்க்கையுடன் இணைக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்," என்று அர்ச்சனா கௌதம் செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.

சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஹஸ்தினாபூரின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் தனது முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று அர்ச்சனா கெளதம் கூறினார். மகாபாரத காலத்திலிருந்தே ஹஸ்தினாபூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சமஸ்கிருத இதிகாசத்தின் படி, மகாபாரத காலத்தில் ஹஸ்தினாபூர் பாண்டவர்களின் தலைநகராக இருந்தது. "ஹஸ்தினாபூர் ஒரு சுற்றுலாத் தலமாகும், பழங்கால கோவில்கள் நிறைய உள்ளன, ஆனால் போக்குவரத்து சரியில்லாதது காரணமாக மக்கள் இங்கு வரமுடியவில்லை. எம்.எல்.ஏ.வாக நான் முதலில் செய்யபோவது என்னவென்றால், இணைப்புக்காக பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் கட்டுவேன். ஏனெனில் அப்போதுதான் இங்கு சுற்றுலா பெருகும் அப்போது மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்,'' என்றார்.

"ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைவதால், அதற்காக நான் பாடுபடுவேன். இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் கொண்டு செல்வேன். இங்கு ஒரே ஒரு சர்க்கரை ஆலை மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த மேலும் பல சர்க்கரை ஆலைகள் திறக்கப்படும்," என்று அவர் கூறினார்.
உ.பி., தேர்தலில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆஷா சிங் மற்றும் கவுரவ ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி பூனம் பாண்டே ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்துக்கும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஏழு கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்





















