Bihar Election: பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை பெற்றுள்ள நிலையில், இதற்கான முக்கிய காரணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பட்டியலிட்டுள்ளார்.

பீகார் தேர்தல் முடிவும்- காங்கிரஸ் தோல்வியும்
பீகாரில் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 202 இடங்களிலும், இண்டியா கூட்டணி வெறும் 34 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்த தோல்வி காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணத்தையும் காங்கிரஸ் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். பீகார் தேர்தல் தோல்வி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என பாஜகவினரால் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பீகார் மாநில தேர்தலை பொறுத்தவரை அங்கு வெற்றி வாய்ப்புகள் நிச்சயமாக இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. பீகாரில் மொத்த மக்கள் தொகையில் 33.76 சதவிகிதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள்.
பீகாரில் மோசமான நிலையில் மக்கள்
பீகாரில் உள்ள குடும்பங்களில் 64 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் பத்தாயிரத்திற்கும் குறைவாக வருவாய் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவிகிதமாக பீகாரில் தலைவிரித்தாடி வருகிறது. ஏறத்தாழ 3 கோடி பேர் பீகாரில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். இத்தகைய அவலநிலைக்கு பீகார் மாநிலத்தை கொண்டு சென்ற பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க எந்தவித நியாயமான காரணங்கள் இல்லை என்று உறுதியாக கூற முடியும். ஆனால் வெற்றி வாய்ப்ப எப்படி ஏற்பட்டது ?
பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிப்பதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 1.21 கோடி பெண்களுக்கு தலா ரூபாய் 10,000 விநியோகம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட போது, அதனை தடுத்து நிறுத்த மறுத்து விட்டது. ஆனால், தெலுங்கானா, ஜார்கண்ட் மாநிலத்தில் இத்தகைய திட்டங்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 10,000 வாக்குகளுக்காக கொடுக்கப்பட்டது லஞ்ச பணமாகத் தான் கருத வேண்டும். இது வெற்றிக்கான மிக முக்கிய காரணமாகும்.
தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள்.?
நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் 20.6 சதவிகித வாக்குகளை பெற்று 89 இடங்களில் பா.ஜ.க.வும், 20.3 சதவிகித வாக்குகளை பெற்று 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. ஆனால், 23 சதவிகித வாக்குகளை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இன்றைக்கும் தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் விளங்கினாலும் 2020 சட்டமன்றத் தேர்தலில் 15.39 சதவிகித வாக்குகளை பெற்று 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது 85 இடங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என்பது கடுமையான சந்தேகத்திற்கு உரியதாகும். இதில் தேர்தல் ஆணையத்தின் சதி இருப்பதை அனைவரும் உறுதி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காகவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற நோக்கத்திலும் இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியயாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெல்லும்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத போக்கிற்கு எதிராக மக்கள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள். எக்கு கோட்டை போல இருக்கிற இந்தியா கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி பங்கு போட்டுக் கொள்கிற சூழல் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருக்கப் போகிறது. இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.





















