Annamalai: நயினார் நாகேந்திரன் பதவியேற்றதுமே இவ்வளவு பிரச்சினையா? கழற்றிவிட்ட ஆர்எஸ்எஸ்; குறுக்கிடும் அண்ணாமலை!
அதிமுகவில் இருந்தவர் என்பதால் பாஜகவை விட கழகத்துப் பாசம் அவருக்கு அதிகமாக இருப்பதாக பாஜக மூத்த புள்ளிகள் அவ்வப்போது கடுகடுப்பதாக சொல்லப்படுகிறது.

பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினாருக்கு ஆர்.எஸ்.எஸ்-யின் போதிய ஆதரவு இல்லை என்றும் அண்ணாமலைபோல் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து அரசியல் செய்யலாமா இல்லை அனுசரித்துச் செல்லலாமா என்று தெரியாமல் தவிக்கிறாராம் நயினார் நாகேந்திரன். நயினார் இன்னும் கழகத்துக் கட்சிக்காரராகவே வாழ்கிறார் என்று ஆர்.எஸ்.எஸ். புள்ளிகள் கடுகடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கழகத்துப் பாசம்
அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை அறிவித்தார். என்னதான் நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவின் தலைவராக இருந்தாலும் கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்தவர் என்பதால் பாஜகவை விட கழகத்துப் பாசம் அவருக்கு அதிகமாக இருப்பதாக பாஜக மூத்த புள்ளிகள் அவ்வப்போது கடுகடுப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சேலம், கோவை என பல்வேறு மீட்டிங்குகளில் நயினார் பங்கேற்று வருகிறார். பாஜக தலைவர் ஆகி விட்டார் ஆனால் இன்னும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்று அவர்களிடம் ஆசிகூட வாங்கவில்லையே என்று பேச்சு எழுந்தது.
வரவேற்பு கொடுக்காத ஆர்.எஸ்.எஸ்.
இதனைத் தொடர்ந்து அனைவரையும் அரவணைத்து செல்பவராக அறியப்படும் நயினார், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு சென்றதாக சொல்கின்றனர். மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்ற அவருக்கு, அவ்வளவு வரவேற்பு இல்லை என்றும் அவருக்கு ஆர்.எஸ்.எஸ் மூத்த புள்ளிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நயினார் பாஜக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். ஆனாலும் கழகத்து கட்சிக்காரரைப்போலவே இருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கடுகடுத்ததாகச் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
கடந்து சில நாட்களுக்கு முன்னர் கோவையில் நடைபெற்ற மீட்டிங்கில் ஒன்றில், ”மேடையில் அமர்ந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கு வணக்கம்” என்று பேச்சை ஆரம்பித்தார் நயினார். மேடையில் இருந்த பாஜக நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்தார். இதெயெல்லாம் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் நயினாரிடம் எடுத்துச் சொன்னதாக கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அரசியல்?
ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தனக்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்ட நயினார் அண்ணாமலையைப் போல் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அரசியல் செய்யலாமா இல்லை அவர்களை அரவணைத்துச் செல்லலாமா என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறாரம் நயினார்.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் இந்த முறை 100 சீட் வேண்டும் என்று கேளுங்கள், இல்லை என்றால் கூட்டணியே வேண்டாம் என்று அண்ணாமலை கூறிவருவதாகவும் சொல்லப்படுகிறது. பதவியேற்ற ஒரு வாரத்திலேயே இவ்வளவு பிரச்சினையா என்று தனக்கு நெருங்கியவர்களிடம் புலம்புகிறாராம் நயினார் நாகேந்திரன்.






















