SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
SP Velumani : அதிமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கட்சி தாவி வரும் நிலையில், இதில் கொங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணியும் தேசிய கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவு- அரசியலில் திடீர் திருப்பம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் திராவிட கட்சிகளான திமுக- அதிமுக அதிர்ச்சிக்குள்ளானது. இதில் உட்கட்சி மோதலால் அதிமுகவின் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தவெகவிற்கு பல்டி அடித்து வருகிறார்கள்.
தவெகவிற்கு பல்டி அடிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
அந்த வகையில் தற்போது வரை விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர். கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்ததாக யார் தவெகவில் இணைவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக 15க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக உள்ளனர். இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கேசி.வீரமணி, நத்தம் விஸ்வநாதன் என முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பொறுப்புகளை நிராகரித்துள்ளனர்.
இபிஎஸ் மீது அதிருப்தி
ஏற்கனவே வகித்து வந்த பதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளையும் புறக்கணித்து வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் அதிருப்தி அணியின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் சசிகலா மற்றும் ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்கிய பிறகு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
மாற்றுக்கட்சியை நோக்கி நகரும் அதிமுக நிர்வாகிகள்
இதனால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியே தானாகவே விலகினால் மட்டுமே புதிய பொதுச்செயலாளர் நியமிக்க முடியும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் மாற்றுக்கட்சியை நோக்கி அதிருப்தி நிர்வாகிகளின் பார்வை திரும்பியுள்ளது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.
அந்த வகையில் தவெகவில் எஸ்.பி.வேலுமணியை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் கோவை மண்டலம் மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தையும் பொறுப்பாக ஒப்படைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பாஜகவில் இணைய திட்டமிடும் எஸ்.பி.வேலுமணி.?
ஆனால் இதனை எஸ்.பி.வேலுமணி நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே எஸ்.பி.வேலுமணி தேசிய கட்சியான பாஜக மீது பார்வை திரும்பியுள்ளதாகவும், இதற்காக பாஜகவின் டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வீ தி லீடர் அமைப்பில் இணையலாமா.? என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















