" பாஜகவின் அராஜகம் ஆணவம் , நாகரிகம் என்றால் என்ன என்பதே தெரியாது " செல்வ பெருந்தகை
தமிழகத்திற்கு எத்தனை முறை மோடி வந்தாலும் தமிழ்நாடு மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ;
பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், மாநிலங்களுக்கிடையே பாகுபாடு காட்டி அரசியல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.
எங்கெங்கெல்லாம் பாஜக ஆட்சி செய்யவில்லையோ, மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்கின்றனவோ, அங்கெல்லாம் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும், அந்தந்த மாநில மக்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் உத்தி.
நாகரிகம் என்றால் என்ன என்பதே தெரியாது
பாஜக கட்டுப் பாட்டுக்குள் மாநிலம் வந்த பிறகே ஒன்றிய அரசின் நிதிகள் ஒதுக்கப்படும். இதை எச். ராஜா போன்றவர்கள் வெளிப்படையாகவே சொல்லுவார்கள். ‘அராஜகமா, ஆணவமா நாங்கள் இப்படித் தான் செய்வோம்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்பதே தெரியாது.
பாஜகவின் பிற்போக்கு தனம் முறியடிப்பு
இந்த மாநிலம் , அந்த மாநிலம் என்று பாரபட்சம் பார்க்காமல், எல்லோரும் இந்தியர்கள், இந்த நாட்டின் குடிமக்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது. இதில் தமிழ்நாடு மட்டும் தான் பாஜகவின் பிற்போக்குத்தனத்தை முறியடித்து தொடர்ந்து போராடி வருகிறது.
பாஜக அரசு நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்க் கட்சிகளை ஒடுக்குகிறது , பாஜகவிற்கு இது கை வந்த கலை அரசியல் அடக்கு முறை, அரசு நிறுவனங்களை வைத்து எல்லோரையும் ஒடுக்குவது. ஆகவே பிரதமர் ஒரு முறை அல்ல, எத்தனை முறை வந்தாலும், 100 முறை வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டே இருப்பார்கள். உலகத்திற்கு ஜனநாயகத்தையும் தேர்தல் முறையையும் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து பேசுகையில் ,
பாஜக கூட்டணிக்கு வந்தால் அதிக பணம் தருவோம் என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். பாஜகவை ஆதரித்தால் நிதி கொடுப்போம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள். இது ஜனநாயகமா ?
ஜி.எஸ்.டி நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு
தமிழ்நாடு அதிகமாக ஜி.எஸ்.டி வரி செலுத்தும் மாநிலம் என்றும், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வேர்வையும் ரத்தத்தையும் சிந்தி ஜி.எஸ்.டி மூலமாக வரி செலுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது சிறுபங்குத் தொகை மட்டுமே. இங்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிகமாக ஒதுக்குகிறார்கள்.
Go Back Modi
இது தான் பாஜகவின் பார்முலா, பாஜக மாடல். உழைப்பவர்களிடமிருந்து எடுத்து, உழைப்பு இல்லாதவர்களுக்கு கொடுப்பதே பாஜக மாடல். இதுவரை காங்கிரஸ் தான் ‘go back மோடி’ என்று சொல்லிக் கொண்டிருந்தது. இப்போது தமிழ்நாட்டு மக்களே go back மோடி திரும்பிப் போ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். வரவிருக்கும் 2026 தேர்தலில் இது பிரதிபலிக்கும், எதிரொலிக்கும் என்று தெரிவித்தார்.























