பழனி கோயில் நில மோசடி.! விஜய் அரசுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ் -முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக
Palani Temple admk protest : நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பழனி கோயில் நில முறைகேடு
பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிலையில் பழனி கோயில் நில முறைகேடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் அறநிலையத் துறையின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.
CBCID விசாரணை- கண்துடைப்பு
அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப்பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை. இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பழனியில் போராட்டம் - இபிஎஸ் அறிவிப்பு
இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Before You Go
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
ட்ரெண்டிங் செய்திகள்






















