OPS political journey : யார் இந்த ஓபிஎஸ்.? சேர்மன் முதல் முதலமைச்சர் வரை- அரசியல் பயணம் என்ன.?
OPS political journey : அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஓபிஎஸ், மூன்று முறை முதலமைச்சராகவும், ஒரு முறை துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் திமுகவில் இணைந்துள்ளார் அதிமுக டூ திமுக ஓபிஎஸ் கடந்து வந்த பாதை என்ன.?

ஓபிஎஸ் அரசியல் பயணம்
தமிழகத்தில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே, அந்த கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் ஓபிஎஸ், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் வைத்து அழகுபார்க்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் 1996-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து 2001 ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு வந்த ஓபிஎஸ்க்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்தது டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவியை இழந்தபோது, தற்காலிக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் வலது கரம் ஓபிஎஸ்
அப்படித்தான் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் போதும், ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் ஓ.பன்னீர் செல்வமே முதலமைச்சராக பதவி வகித்தார். 2017ஆம் ஆண்டு வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்ற அதிமுகவில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆளாளுக்கு அதிகாரத்தை கைப்பற்ற போட்டி போட்டார்கள். ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நிர்பந்தம் செய்யப்பட்டார். அப்போது கட்சி மற்றும் ஆட்சியை தன் கைவசம் கொண்டு வந்திருந்தார் சசிகலா, இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார் ஓபிஎஸ்.
இதனையடுத்து பிரிந்து சென்ற ஓபிஎஸ்யை அதிமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே மீண்டும் அதிமுகவில் இணைவேன் என நிபந்தனை விதித்தார். இதனால் அதிமுகவில் இருந்து அந்த இரண்டு பேரும் தூக்கப்பட்டனர். கட்சிக்கு வந்த உடனேயே ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள டிடிவி, சசிகலாவின் அத்தனை பிளக்ஸயும் அவரது ஆதரவாளர்களால் கிழித்தெறியப்பட்டது. அடுத்தாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என 4 வருடங்கள் பதவி வகித்த ஓபிஎஸ்க்கு 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது.
இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்
ஒற்றை தலைமை என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருந்த நிலையில், மீண்டும் தர்மயுத்தம் 2.0 தொடங்கினார் ஓபிஎஸ். இதனையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட போராட்டங்கள் மேற்கொண்டார் ஓபிஎஸ், ஆனால் சட்டப்போராட்டங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில், பாஜக நம்பி அடுத்ததாக களம் இறங்கினார். பாஜக எந்த திட்டம் அறிவித்தாலும் முதல் ஆளாக ஆதரவு கரம் நீட்டினார். பாஜக உறுப்பினராகவே மாறினார் ஓபிஎஸ். இந்த நிலையில் தான் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாஜக,
இதனால் எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனையால் ஓபிஎஸ்யை கை கழுவியது பாஜக, இதனையடுத்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி, அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார் என இபிஎஸ்யை கடுமையாக விமர்சித்தார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையப்போவதில்லையென கூறியிருந்தார். பாஜகவோடும் கூட்டணி இல்லையெனவும் அறிவித்து வெளியேறினார்.
திமுகவில் ஓபிஎஸ்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒன்றாக கூட்டணி அமைத்த நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய மீண்டும் கதவு திறக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார் ஓபிஎஸ், எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி என பாசமாக பேசினார். ஆனால் ஓபிஎஸ்யின் இந்த பாச வார்த்தையை நம்பாத எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் ஓபிஎஸ்யை இணைக்க வாய்ப்பே இல்லையென மறுத்துள்ளார். இதனால் எந்த வழியும் இல்லாமல் தவித்த ஓ.பன்னீர் செல்வம் இன்று அதிமுகவின் தாய் கழகமான திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் ஓபிஎஸ்.























