பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
தமிழ்நாட்டு அரசியலில் தனது இழந்த செல்வாக்கை மீண்டும் கொண்டு வர ஓ.பன்னீர்செல்வம் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகே தனது அரசியல் செல்வாக்கை படிப்படியாக இழந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு அதளபாதாளத்திற்குச் சென்றது.
தொடர்ந்து புறக்கணித்த பாஜக:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக-வை கைப்பற்றுவேன் என்று திட்டமிட்டு துடிதுடித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டால் போதும் என்ற நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பெரிய தடைக்கல்லாக இருக்க பிரதமர் மோடி, அமித்ஷாவின் உதவியை ஓ.பன்னீர்செல்வம் நாடினார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன், ஏசி சண்முகம் என கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தொடர்ந்து மறுத்து வந்தார். ஆடி திருவாதிரை நிகழ்வில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சித்தபோதும் நேரம் ஒதுக்காமல் பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். அமித்ஷாவை சந்திக்க எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
இனி பாஜகவுக்கு எதிர்ப்புதான்:
பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் தான் அவமதிக்கப்படுவதாக உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து தடாலடியாக வெளியேறினார். அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு மற்றொரு மிகப்பெரிய பின்னணியும் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு மனநிலை என்பது அதிகளவு இருக்கிறது.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காதது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பிலே இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த எதிர்ப்பு மனநிலை உள்ளது. அடுத்த 10 மாதத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் அதிகரிக்க பாஜக எதிர்ப்பு அரசியலை கையில் எடுப்பதே ஒரே ஆயுதம் என்று ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.
எதிர்ப்பு அரசியல் கைகொடுக்குமா?
அதன் எதிரொலியாகவே பாஜக கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறியது வரலாற்றுப் புரட்சி என்று அதிரடி அறிக்கையை வெளியிட்டார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் கேட்டிருந்தால் நேரம் வாங்கித் தந்திருப்போம் என்ற நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை வெளிப்படையாக நிருபர்களிடம் காட்டினார்.

ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய சிலர் அதிமுக - பாஜக கூட்டணியில் முயற்சித்தாலும், பாஜக எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தி தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்வாக்கை மீட்பாரா?
மு.க.ஸ்டாலினுடான சந்திப்பு, விஜய்யுடன் கூட்டணி என்ற வதந்தி போன்றவை அதற்கான அடித்தளத்தை வலுவாக்குகிறது. மேலும் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பாஜக-விற்கு எதிராக முழுவீச்சில் செயல்படுவாரா? தனது இழந்த அரசியல் செல்வாக்கை அவர் மீட்பாரா? அவர் யாருடன் கூட்டணி வைப்பார்? என்பதை அடுத்தடுத்த அவரது செயல்பாடுகளே முடிவு செய்ய உள்ளது.





















