வழக்குகளை முறியடிக்கும் சட்டைநாதர்? அதிமுகவின் 'முக்கிய புள்ளிகள்' சீர்காழியில் நள்ளிரவு வழிபாடு!
சட்ட சிக்கல் நீக்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில் சுக்கிரவார வழிபாடில் முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன் மற்றும் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி: சட்ட சிக்கல் நீக்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில் சுக்கிரவார வழிபாடில் முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன் மற்றும் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆன்மீகச் சிறப்புமிக்க அடையாளமாகவும், சமயக்குரவர் திருஞானசம்பந்தருக்கு அன்னை பார்வதி தேவி ஞானப்பால் ஊட்டிய தலமாகவும் விளங்குவது தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில். இக்கோயிலில் வீற்றிருக்கும் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி மற்றும் மலைக்கோயிலில் அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரர், சட்டைநாதர் ஆகியோரைத் தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சுக்கிரவார வழிபாடு
இக்கோயிலின் மிக முக்கிய சிறப்பம்சமாக விளங்குவது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நடைபெறும் சுக்கிரவார வழிபாடு ஆகும். புராண காலத்திலிருந்தே இந்த வழிபாட்டிற்குத் தனிச்சிறப்பு உண்டு. வெள்ளிக்கிழமை இரவு சட்டைநாதர் சுவாமிக்கு நடைபெறும் இந்த விசேஷ பூஜையில் பங்கேற்றால், தீராத பகை (சத்ருக்கள் தொல்லை), நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மேலும், மனித வாழ்வை முடக்கும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள் விலகி, வாழ்வில் சுபிட்சமும் நன்மைகளும் பெருகும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமைச்சர்கள், நீதிபதிகள், திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரகசியமாகவும் நேரிடையாகவும் இங்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் வருகை
இந்த வார சுக்கிரவார வழிபாட்டில் பங்கேற்பதற்காக அஇஅதிமுக-வின் முக்கிய நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான வைகை செல்வன் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சீர்காழிக்கு வருகை தந்தனர்.
ஆலயத்திற்கு வருகை தந்த அவர்களைத் தருமபுரம் ஆதீனக் கோயில் நிர்வாகத்தினர் முறைப்படி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, சுக்கிரவார வழிபாட்டின் தொடக்கமாக நடைபெறும் பலிபீட அபிஷேகத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் கலந்துகொண்டனர். சட்டைநாதர் சுவாமிக்கு நடைபெறும் ரகசிய மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனைகளை அவர்கள் மனமுருகித் தரிசனம் செய்தனர்.
அடுத்தடுத்த வழிபாடுகள்
பலிபீட வழிபாட்டைத் தொடர்ந்து, பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் மூலவர் பிரம்மபுரீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்தனர், பின்னர் விசேஷ அலங்காரத்தில் இருந்த முத்து சட்டைநாதரைத் தரிசித்தனர், மலைக்கோயில் மேல்தளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரர் மற்றும் தோணியப்பர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இறுதியாக மலை உச்சியில் வீற்றிருக்கும் சட்டைநாதர் சுவாமியைத் தரிசித்துத் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். வழிபாட்டின் நிறைவாக, கோயில் நிர்வாகம் சார்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு மாலை அணிவித்து, கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
உற்சாகத்தில் தொண்டர்கள் மற்றும் பக்தர்கள்
இந்த ஆன்மீகப் பயணத்தின் போது, அஇஅதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக தொண்டர்கள் அங்கு திரண்டனர்.
கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்களும், பக்தர்களும் முன்னாள் அமைச்சர்களுடன் ஆர்வத்துடன் உரையாடியதுடன், அவர்களுடன் செல்பி (Selfie) எடுத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், சட்ட சிக்கல்கள் நீங்கி, ஆன்மீக பலம் பெறவும், தடைகள் நீங்கவும் மேற்கொள்ளப்பட்ட இந்த வழிபாடு சீர்காழி பகுதியில் பெரும் பேச்சாக இருந்தது.
























