"அடுத்த மாதமே ஆட்சி மாற்றம்: எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்!" - ஆரூடம் சொன்ன அன்புமணி ராமதாஸ்...
அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும், திமுக ஆட்சியின் தோல்விகளையும் செம்பனார்கோயில் தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் பட்டியலிட்டு பேசியுள்ளார்.

செம்பனார்கோவில்: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் பவுன்ராஜயை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செம்பனார்கோவில் கடைவீதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஏராளமான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திமுக அரசைக் கடுமையாகச் சாடியதோடு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் உறுதி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர்!
கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் வெற்றி பெற்றால், அடுத்த மாதமே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பெண்களுக்கு எதிரான, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி. அதன் பிறகு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது வரலாற்றுத் தேவையாகும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும்," என்று தெரிவித்தார்.
நலிவடையும் விவசாயம்: ஸ்டாலின் அரசு மீது குற்றச்சாட்டு
டெல்டா பகுதி விவசாயிகளின் நிலை குறித்து வேதனையோடு பேசிய அவர் "விவசாயிகளை நான் கடவுளாகப் பார்க்கிறேன். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலச் சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் தினமும் சராசரியாக இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 3,250 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். டெல்டா காரன் என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலினுக்கு, ஒரு குவிண்டால் நெல்லின் விலை கூடத் தெரியாது."
மத்திய அரசு நெல்லுக்கு ரூபாய் 2,369 வழங்கும் நிலையில், திமுக அரசு ஊக்கத்தொகையாக வெறும் ரூபாய் 131 மட்டுமே வழங்குகிறது. அண்டை மாநிலமான தெலங்கானாவில் ரூபாய் 500 ஊக்கத்தொகை வழங்கப்படும் நிலையில், திமுக அரசு கடந்த ஆண்டை விட வெறும் ஒரு ரூபாய் மட்டுமே உயர்த்தி விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
மருத்துவக் கல்லூரியும் கல்விப் புரட்சியும்
மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அன்புமணி.
புதிய மாவட்டம்: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி: எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தார். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை. ஒரு எம்பிபிஎஸ் (MBBS) சீட் கூட உயர்த்தப்படவில்லை.
இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி, ஏழைப் பிள்ளைகளை மருத்துவர்களாக்கிய பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும். அதேபோல் வன்னியர் மக்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததும் அவர்தான், ஆனால் அதைத் திட்டமிட்டுக் கெடுத்தவர் ஸ்டாலின்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் புழக்கம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகையில், "இன்றைய திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒரு குழந்தைக்குக் கூட இத்தகைய கொடுமை நடக்கவில்லை. இன்று கஞ்சா, கொக்கைன், ஹெராயின், அபின் போன்ற போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. சாராயமும் கஞ்சாவும் விற்கும் இந்த ஆட்சியைப் பெண்கள் தூக்கியெறிய வேண்டும்," என்று ஆவேசமாகப் பேசினார்.
மீனவர் நலன் மற்றும் வாக்காளர் வேண்டுகோள்
அதிமுக மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், திமுக ஒருவருக்குக் கூட வாய்ப்பு தரவில்லை என்று விமர்சித்தார்.
"விவசாயப் பெருமக்களே, உங்கள் காலைத் தொட்டு வேண்டுகிறேன். ஜாதி, மதம், கட்சி என எதையும் பார்க்காமல், விவசாயிகளின் எதிரியான திமுகவை வீழ்த்துங்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் அதிமுக ஆட்சி அவசியம். பவுன்ராஜயை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எனது ஆசை," என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















