Bussy Anand: புஸ்ஸி ஆனந்தை நெருங்கிய காவல்துறை? இன்று இரவுக்குள் கைது?
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இருக்கும் இடத்தை காவல்துறையினர் நெருங்கி விட்டதாகவும் அவர் இன்று நள்ளிரவு கைது செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இருக்கும் இடத்தை காவல்துறையினர் நெருங்கி விட்டதாகவும் அவர் இன்று நள்ளிரவு கைது செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் விவகாரம்:
தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரச்சார திட்டத்தை அண்மையில் அறிவித்தார். அதன்படி, திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சார பயணத்தை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.
அதே நேரம் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது இன்று (அக்டோபர் 3) விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. வழக்கு தொடக்க நிலையில் உள்ளது எனவே முன்ஜாமீன் கொடுக்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று மதுரை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
சுற்றி வளைத்த காவல்துறை?
முன்னதாக என்.ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் தான் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இருக்கும் இடத்தை காவல்துறையினர் நெருங்கி விட்டதாகவும் அவர் இன்று நள்ளிரவு கைது செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல் துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் புஸ்ஸி ஆனந்த் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார் என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.




















