மாவட்ட தலைவரை மாற்றம் செய்.. கரூரில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
2024-ல் கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராகச் செந்தில்நாதன் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கரூர் மாவட்ட பாஜக தலைவராக இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில்நாதனுக்கு எதிராக கட்சி அலுவலகம் அருகிலேயே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட பாஜக தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற செந்தில்நாதன் 20 ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த நபராக வலம் வருபவர். கரூரில் கிரானைட் தொழில் செய்து வருகிறார். கடந்த 2021 நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை அதிமுகவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, திமுகவைச் சேர்ந்த கே.சி.பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு, 4541 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.
அதன் பின்னர், 2019ம் நடைபெற்ற, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, அதிமுக சார்பில் மீண்டும் செந்தில்நாதன் போட்டியிட்டு, 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதிமுகவில், அதன் பின்னர் ஏற்பட்ட உட்கட்சி விவகாரம் காரணமாக, கடந்த 2021 நவம்பர் மாதத்தில் பாரதிய ஜனதா கட்சியில், செந்தில்நாதன் இணைந்து, கரூர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். 2024-ல் கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராகச் செந்தில்நாதன் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதனையடுத்து பாஜகவில் மாவட்ட தலைவர்களுக்கான உள்கட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக செந்தில்நாதன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அண்மையில் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற நிலையில், உட்கட்சியில் அவருக்கு எதிராக நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான், இன்று கரூர் மாவட்ட பாஜக அலுவலகம் அருகிலேயே செந்தில் நாதனுக்கு எதிராக பரபரப்பான வாசகங்களுடன், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

