Congress in TVK alliance : கழற்றி விட தயாரான திமுக.?? தவெகவிற்கு பல்டி அடிக்கும் காங். - உறுதியாகும் புதிய கூட்டணி- நடப்பது என்ன.?
Congress in TVK alliance : தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிக்கவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணியை பலப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை இணைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 4அரை வருடமாக திமுக கூட்டணியில் அமைதி காத்து வந்த காங்கிரஸ், தற்போது தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் கூட்டணி கனவிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆட்சியில் பங்கு வேண்டும், 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், 2 ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என விடாப்பிடியாக நின்றது.
கூட்டணி ஆட்சி - திமுக அதிருப்தி
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சமூகவலைதளத்தில் திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் என வெளிப்படையாகவே பதிவுகளை வெளியிட்டு வந்தனர். மேலும் ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனையையும் மேற்கொண்டு வந்தனர். இதனை சற்றும் ரசிக்காத திமுக, காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவித்தது. ஆனால் அங்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக- காங்கிரஸ் நிர்வாகிகள் யாருக்கு பலம் அதிகம் என நேரடியாகவே மோதிக்கொண்டனர்.
தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை.?
இதனால் கூட்டணி தொடருமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில், திமுக தரப்போ ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் எனவும், ஒரு ராஜ்யசபா சீட் தான் வழங்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எனவே காங்கிரஸ் கட்சியே கூட்டணியில் இருந்து வெளியேறட்டும் என திமுக முடிவிற்கு வந்து விட்டதாகவே கூறப்படுகிறது. இதனை உணர்ந்த காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை திரைமறைவில் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தவெகவுடன் பேசுவதையும் உறுதி செய்திருந்தார்.
விஜய்யுடன் கூட்டணி ஆலோசனை
அடுத்தக்கட்டமாக ராகுல்காந்தியின் தேர்தல் வியூக வகுப்பார்கள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கூட்டணி ஆட்சி அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ்- தவெக இடையிலான பேச்சுவார்த்தையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகல் வெளியாகியுள்ளது. எனவே நாளை அல்லது நாளை மறுதினம் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்குமா.? அல்லது வெளியேறுமா.? என தெரியவரும்.























