Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
Panaiyur Babu join dmk : விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்துள்ளார்.

சீட் கொடுக்காத திருமா- விலகிய பனையூர் பாபு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் தவெக அணிக்கு பல்டி அடித்து அமைச்சரவையில் இணைந்துள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது எம்எல்ஏவாக இருந்த பனையூர் பாபுவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்தார். இதன் காரணமாக பனையூர் பாபு தலைமை மீது அதிருப்தி அடைந்த நிலையில், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். இதனையடுத்து தேர்தல் முடிவிற்கு பிறகு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் திருமாவளவன் ஒரு நிலைப்பாட்டில் இல்லையெனவும், மாறி மாறி கருத்துகளை கூறி வருவதாக தெரிவித்திருந்தார்.
திமுகவில் இணைந்த பனையூர் பாபு
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தார் பனையூர் பாபு, அப்போது பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினராக தான் என்னை பலருக்கு தெரியும், ஆனால் எனக்கு தாய் வீடு திமுக தான். திமுகவில் ஏற்கனவே கட்சி பணியாற்றி உள்ளதாக கூறினார். செய்யூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தாய் உள்ளத்தோடு நிறைவேற்றி கொடுத்தவர் முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் என தெரிவித்தார். செய்யூர் தொகுதியில் பட்டியலினத்தவர்கள் 12 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போதைய அரசு தலித் மக்களுக்கு தவெக உறுதுணையாக இருக்கும் என்பதை போன்ற பிம்பத்தை கட்டமைப்பதாகவும் தெரிவித்தார்.
திமுகவில் பனையூர் பாபுவை இணைத்தது ஏன்.?
இதனை தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், செய்யூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவையும், அவருடன் கைகோர்த்து வந்துள்ள அனைவரையும் வருக வருக என திமுக சார்பில் வரவேற்கிறேன். பனையூர் பாபுவை கடந்த ஐந்து வருடமாக சட்டமன்றத்தில் கூர்ந்து கவனித்துள்ளேன். அமைதியாக வருவார் போவார். ஆனால் பேரவையில் பேசும்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேச கூடியவர். தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை கேட்டு பெறுவார். கொள்கைவாதியாக பேச கூடியவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பான அவரது கடிதத்தை பார்த்தேன். அரசியல் மாறுபாடுகளை வேறுபாடுகளை அடக்கத்துடன் சுட்டிக்காட்டி , யாரையும் புண்படக்கூடிய வகையில் வார்த்தைகளை பயன்படுத்தாமல் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
ஸ்டாலின் போடும் செம பிளான்
திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் வேலை அதிகமாக இருக்கும். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. பல்வேறு விமர்சனங்களை அரசு எதிர்கொண்டிருக்கிறது. இந்த அரசு 3 மாதமாவது தாங்குமா என்ற நிலையில் உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் விலகி சென்ற நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் எம்எல்ஏவை திமுகவில் இணைத்திருப்பது திருமாவளவனை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வரும் நாட்களில் மதிமுகவில் இருந்து வைகோவிற்கு எதிராக விலகி சென்ற நிர்வாகிகளான மல்லை சத்யா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை கட்சியில் இணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















