ADMK Report : 'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி..!
”தொகுதிவாரியாக மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்டை பார்த்தப் பின்னர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்”

சட்டமன்ற தேர்தலில் சரியாக செயல்படாத அதிமுக மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகவும், யார், யார் தேர்தலில் செயல்பட்டார்கள் என்ற பட்டியலை, அதிமுக வியூக வகுப்பு நிறுவனம் தயாரித்து எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலில் சுணக்கம் காட்டிய மா.செ.க்களுக்கு கல்தா
சட்டமன்ற தேர்தல் முடிந்து, இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நபர்களை அழைத்து சேலத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய மாவட்ட செயலாளர்கள், அணியின் நிர்வாகிகள் குறித்த பட்டியலை அவர்களிடம் பகிர்ந்து, இவர்கள் மீது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக எடப்பாடி கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருத்தத்தை பகிர்ந்த எடப்பாடி
குறிப்பாக, திமுகவுடன் செட்டிங் போட்டுக்கொண்டு அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் வகையில் செயல்பட்ட 5 மாவட்ட செயலாளர்கள் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருப்பதாகவும், ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்காக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பிரச்சாரத்தை தொடங்கி, பல்வேறு பணிகளில் தான் ஈடுபட்டிருந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலரே இதுபோன்று செயல்பட்டுள்ளது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் அவர் வருத்தமாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி உறுதி
அதே நேரத்தில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்று தமிழக உளவுத்துறையில் ஐ.ஜி. பொறுப்பில் பணியாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அதிகாரி சர்வே ரிப்போர்ட் எடுத்துக் கொடுத்திருப்பதாகவும், தொகுதி வாரியாக யாருக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைக்கும் என்ற டேட்டாவையும் அவர் எடுத்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறை மாஜி அதிகாரி எடுத்துக்கொடுத்த சர்வே அடிப்படையில், பல்வேறு தொகுதிகளில் அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற தெம்பில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே பழனி முருகன் கோயிலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தை உற்சாகத்தோடு சென்று தரிசனம் செய்துவிட்டு வரும்படி எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாகவும் சேலம் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும், ஆட்சி அமைந்த பிறகு குடும்பத்தை சேர்ந்தவர்களின் தலையீடு அரசாங்கத்தில் இருக்கக் கூடாது என்பதையும் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் உறுதிபட தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை பட்டியலும் ரெடி
அதனடிப்படையில், அதிமுக ஆட்சி அமைந்தால் யார், யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நெருக்கமான சகாக்களுடன் ஆலோசித்திருப்பதாகவும், அதில் தென் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவருக்கு கல்தா கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவிற்கு ஆதரவாக Exit Poll ?
அதே நேரத்தில் இன்று வெளியாகவிருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கும் என்றும் உளவுத்துறை மாஜி அதிகாரி தெரிவித்திருப்பதாகவும், அதனடிப்படையில் இன்று வெளியாகும் முடிவுகளை எதிர்பார்த்து அதிமுகவின் முக்கிய தளகர்த்தர்கள் மிகுந்த ஆர்வத்திலும் இருக்கின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















