தனித்து போட்டி! ராமதாஸ் அதிர்ச்சி முடிவு! நிர்வாகிகள் கலக்கம்.. திமுக ஆஃபர் பின்னணி?
Pmk Ramdoss: "வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்து இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது"

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக தனது பழைய கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், அதிமுக தனது கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில், வடதமிழகத்தில் செல்வாக்கு மிக்க பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக-வில் பிளவு: தந்தை - மகன் இடையே மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சி தற்போது இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது. கட்சியின் அங்கீகாரம் மற்றும் சின்னம் அன்புமணி தரப்பிடம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிராக ராமதாஸ் தரப்பினர் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையே, அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது ராமதாஸ் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் ராமதாஸுக்கு முட்டுக்கட்டை
அன்புமணியின் முடிவுக்குப் போட்டியாக, ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் கடும் எதிர்ப்பு காரணமாக, ராமதாஸைச் சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. தொடக்கத்தில் 20 இடங்கள் வரை ராமதாஸ் தரப்பு எதிர்பார்த்த நிலையில், திமுக வெறும் 3 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதனால் அதிருப்தியடைந்த ராமதாஸ், தற்போது திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். திருமாவளவனை ராமதாஸின் பேரன்கள், சுகந்தன் மற்றும் முகுந்தன் ஆகிய இருவரும் திருமாவளவனிடம் பேசிய பிறகும், கூட்டணிக்கு வாய்ப்பில்லை என கை விரித்ததாக கூறப்படுகிறது.
திமுக கொடுத்த ரகசிய ஆஃபர்?
தற்போதைய சூழலில் ராமதாஸ் மீண்டும் அன்புமணியுடன் இணைய வேண்டும் அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால், திமுக தரப்போ, "நீங்கள் எந்தக் கூட்டணிக்கும் செல்ல வேண்டாம்; தனித்துப் போட்டியிடுங்கள்" என ஒரு ரகசிய 'ஆஃபர்' கொடுத்திருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. ராமதாஸும் தனித்துப் போட்டியிடும் முடிவை நோக்கி நகர்வதால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கலக்கத்தில் நிர்வாகிகள்
ஒருவேளை ராமதாஸ் தனித்துப் போட்டியிட்டால், குறைந்தபட்சம் 40 முதல் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், தன்னிடம் தேர்தல் செலவு செய்யப் பணம் இல்லை என்பதைச் சந்திக்க வரும் நிர்வாகிகளிடம், ராமதாஸ் வெளிப்படையாகக் கூறி வருவதாகத் கூறப்படுகிறது. தேர்தல் செலவுகளை வேட்பாளர்களே ஏற்க வேண்டிய சூழல் உருவானால், அது கட்சிக்குப் பின்னடைவைத் தரும் என்பதால், ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















