EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
'பிரதமர் நரேந்திரமோடியுடனான ரகசிய பேச்சின்போது அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி குறித்து சில தகவல்களை எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது’

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திரமோடியை திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்று வரவேற்றார். அப்போது பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கான நேரம் குறைவாக இருந்ததால் இருவரும் தனியாக சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. ஆனால், தங்கும் இடத்திற்கு இருவரும் பரஸ்பரம் சென்று சேர்ந்த பின்னர் அவர்கள் இருவரிடையே தொலைபேசி மூலம் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
10 நிமிடங்கள் பிரதமரிடம் EPS பேச்சு
கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பிரதமர் நரேந்திரமோடியும் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். அப்போது, தமிழ்நாட்டில் தேர்தல் வருவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே மக்கள் சந்திப்பு பயணத்தை எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, திமுக அமைச்சர்களின் ஊழல்கள், போதை கலாச்சாரம் உள்ளிட்டவைகள் பற்றியும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடியிடம் தெரிவித்துள்ளார். இதனை அமைதியாக கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய செயலாளரிடம் இந்த விவாகரம் தொடர்பாக மத்திய உளவுத்துறை திரட்டி வைத்துள்ள தகவல்களையும் கோரியுள்ளார்.
பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மீது புகார்
குறிப்பாக, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மீது சில புகார்களையும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கதர்வாரிய அமைச்சர் காந்தி ஆகியோர் குறித்த சில பிரத்யேக விவரங்களையும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வரின் உடல்நிலை குறித்தும் பேச்சு
அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை தொடர்பாகவும் இருவரும் பேசியிருப்பதாக அதிமுக தரப்பு தெரிவித்துள்ளன
மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்திய EPS
இந்த பேச்சுவார்த்தையின்போது, விமான நிலையத்தில் வரவேற்க சென்றபோது பிரதமர் மோடியிடம் கொடுத்த தமிழக மக்கள் நலன் சார்ந்த மூன்று கோரிக்கைகளை உடனடியாக பரீசிலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற செல்லும்போது ‘சிபல் ஸ்கோர்’ கேட்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் திட்டங்களையும் பேசுங்கள்
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிற்குக் மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் செய்து வரும் நலத்திட்டங்கள் பற்றியும் சுற்றுப்பயணத்தின்போது மக்களிடையே பேசுங்கள் என்றும் அப்படி பேசுவதால் பாஜக – அதிமுகவினரிடையே உறவு என்பது இன்னும் பலப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம் பற்றியும் விவாதம்
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க அனுமதி கேட்டு அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு தலைவர் ஒ.பன்னீர்செல்வம் தவமாய் தவம் கிடந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலில் கூட விழுகிறோம் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என ஒபிஎஸ் தரப்பினர் வாய்விட்டு அழுதுப்பார்த்தும் எடப்பாடி பழனிசாமி மசிந்துக்கொடுக்காத நிலையில், ஒபிஎஸ்-சை இந்த தருணத்தில் பிரதமர் சந்தித்தால் அது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், பிரதமருடனான சந்திப்பிற்கும் அவரை வரவேற்பதற்கும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை. பிரதமரும் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசியில் பேசும்போது ஒபிஎஸ் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடியிடம் சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















