DMK Announcement : ’வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெரு’ தீவிரமாக களமிறங்கிய திமுக – அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகள்..!
’தொடர்ந்து மகளிர் அணி மாநாட்டை நடத்துவதன் மூலம் வரும் தேர்தலில் வீடு வீடாக மகளிர் அணியினரை இறக்கி பிரச்சாரம் செய்ய திமுக தீவிர திட்டம் வகுத்துள்ளது’

2026 தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக, தேர்தல் ஜூரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தன்னுடைய தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்த அதே நேரத்தில் அதிமுகவின் முக்கியமான தளகர்த்தரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை திமுகவில் இணைத்து அதிரடி காட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கூட்டணி பலத்தோடு நிற்கும் திமுக
குறிப்பாக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், வலதுசாரி இயக்கங்கள், மதிமுக உள்ளிட்ட 21 கட்சிகளை கொண்ட மாபெரும் கூட்டணி பலத்தோடு திமுக இருந்தாலும் 2019 ஆண்டிலிருந்து தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி வாகை சூடி வந்தாலும், வரும் 2026 தேர்தலில் வெற்றி பெறுவதை மிக முக்கியமாக கருதுகிறது திமுக. அதனால்தான், அதற்கான பணிகளை பல மாதங்களுக்கு முன்னரே அக்கட்சி ஆரம்பித்தது.
ஓரணியில் தமிழ்நாடு, ஒன்றிணைவோம் வா, உங்களுடன் ஸ்டாலின், வெல்வோம் ஒன்றாக என பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் அக்கட்சியினரும் தொய்வின்றி உற்சாகத்தோடு களத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொருநாளும் திமுக தலைமையில் இருந்து கிளைக் கழகம் வரை உத்தரவுகளும் அறிவுறுத்தல்களும் சென்றுக்கொண்டிருக்கின்றன. தேர்தல் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்பதை தெளிவாக வரையறுத்து உத்தரவுகள் பறந்து வருகின்றன.
கூட்டம், மாநாடு என தீவிர பிரச்சாரத்தில் திமுக
அது மட்டுமின்றி, வடக்கிலும் தெற்கிலும் இளைஞரணியின் பிரம்மாண்ட மாநாடு, மேற்கிலும் டெல்டாவிலும் மகளிர் மாநாடு என தொடர்ந்து மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் அடுத்தடுத்து தேர்தலுக்கான அனைத்து ஆயத்த பணிகளையும் திமுக பார்த்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தியதன் மூலம் புதிய 2 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக மார்த்தட்டி வருகிறது திமுக. அதோடு, வரும் பிப்ரவரியில் திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் பரப்புரை கூட்டங்களை அறிவித்திருக்கிறது திமுக. குறிப்பாக, திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களை தொகுதி வாரியாக, ஒவ்வொரு தேதி, நாள், இடம் வாரியாக பட்டியலிட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அக்கட்சி. இதன் மூலம் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதுடன், மக்களையும் கவர முடியும் என்று காய்நகர்த்தி வருகிறது திமுக.
பழைய கூட்டணியை மீண்டும் எதிர்கொள்ளும் திமுக
திமுக 21 கட்சிகளுடன் முழு பலத்தில் இருக்கும்போது, அதிமுகவும் பாஜகவும் கடந்த 2021 தேர்தலில் அமைத்த கூட்டணியோடு இப்போது திமுகவை எதிர்க்க தயாராகி வருகிறது. அதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் மக்கள் மத்தியில் தனி செல்வாக்கு இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்களுக்கு ஸ்டாலின் அளவிற்கான செல்வாக்கு இல்லையென்ற நிலையில், அவர்கள் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து திமுகவை எதிர்க்க முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்தான், டிடிவி தினகரன் பெயரையே சொல்ல தயங்கிய எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று விமர்சித்த டிடிவி தினகரனும் மோடி முன்னிலையில் கைகளை குலுக்கிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் ஒன்றுசேர்ந்துள்ளனர்.
2 கோடி பயனாளிகளை நம்பும் திமுக
ஆனால், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் 2 கோடி பயனாளிகளிடம் திமுகவின் திட்டங்கள் சென்றடைந்துள்ளதாகவும் அது வரும் தேர்தலில் பெரிய அளவில் திமுகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் என அக்கட்சி தலைமை நம்புகிறது. மகளிர் மாநாட்டை தொடர்ந்து நடத்துவதன் மூலம் இந்த முறை வீடு வீடாக திமுக மகளிர் அணியை பிரச்சாரத்திற்கு அனுப்பவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் பல்வேறு திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து ஆட்சியை தக்க வைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக இறங்கி பணியாற்றி வருகிறது.























