DMK Congress Alliance : ‘காங்கிரஸ் பற்றி Comment’ திமுக நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!
ராகுல் – .ஸ்டாலின் இடையே இருக்கும் நட்பு காரணமாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் செய்யும் சேட்டைகளையெல்லாம் திமுக பொறுத்துக்கொண்டு போகிறது. ஒரு கட்டத்திற்குமேல் வாய் நீண்டால் கடிவாளம் போட திமுக தயங்காது

2026 சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தன்னுடைய வலுவான கூட்டணியை தக்க வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது திமுக. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தலைவர் ராஜேஸ் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன் வைத்து திமுகவை சீண்டி வருகின்றனர். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய டேட்டா பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியும் தன் பங்கிற்கு விஜயை சந்திப்பது, அவருக்கு விசில் சின்னம் கிடைத்தவுடன் வெற்றிக்கான விசில் உதப்பட்டுவிட்டது என்று பதிவிடுவது என்று திமுகவை உஷ்ணப்படுத்தி வருகிறார்.
களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து
காங்கிரஸ் தலைவர்களின் இதுபோன்ற செயல்பாடுகளால் திமுக தலைமை அதிருப்தியில் இருந்தாலும் ராகுல்காந்தியோடு இருக்கும் நல்லுறவும் நட்பும் கெட்டுப்போகக் கூடாது என்ற எண்ணத்தில், இதுபோன்ற கருத்துகளையெல்லாம் திமுக தலைமை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால், களத்தில் பணியாற்றும் திமுக நிர்வாகிகளுக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என அனைவரும் வெற்றி பெற காரணமாக இருந்தது திமுகவினரின் உழைப்புதான் என்றும் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் பொங்கி வருகின்றனர்.
வெகுண்டெழுந்த மதுரை திமுகவின் கோ.தளபதி
இந்நிலையில், மதுரை சுப்பிரணியபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாநகர மாவட்ட செயலாளரும் கோ.தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, ‘காங்கிரஸ் கட்சியில் சிலர் இருக்கிறார்கள். அவர்களது பெயரை சொன்னாலும் ஒன்றும் தவறில்லை. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றைதான் குறிப்பிடுகிறேன். அவர்கள் எம்.பி ஆகிவிட்டார்கள். இந்த தேர்தலில் யார் எம்.எல்.ஏ ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன ? என நினைக்கிறார்கள். அதனால்தான், இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் ஆட்சியில் பங்கு என்று கேட்கிறார்கள். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. நாம் தான் இந்த கூட்டணியின் முக்கிய கட்சி. அப்படியிருக்கும்போது, ஒரு தொகுதிக்கு மூன்றாயிரம், நான்காயிரம் ஓட்டு மட்டுமே இருக்கும் காங்கிரஸ், அதுவும் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத காங்கிரஸ் இந்த அளவுக்கு பேசுவது மனதிற்கு வருத்தமாக உள்ளது’ என்று பொங்கியிருந்தார்.
எதிர்வினையாற்றிய காங்கிரஸ்
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தேசிய தலைமையிடம் சொல்லுவேன் என்றும் கூட்டணி கட்சிக்கான தர்மத்தை மதித்து பேச வேண்டும் என ஜோதிமணியும் கூறியிருந்தனர். அதோடு, தளபதி மீது முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் பங்கிற்கு கண்டனம் தெரிவித்தார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை.
முக்கிய உத்தரவு போட்ட திமுக – கப்சிப்ப்பான நிர்வாகிகள்
இப்படியான கருத்துகள் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பேசுபொருளாக மாறிய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக திடீர் உத்தரவு ஒன்றை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு போட்டுள்ளது. கூட்டணி தொடர்பாகவும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பற்றி யாரும் எந்த விமர்சனத்தையும் பொதுவெளியில் முன் வைக்கக் கூடாது என்று வாய்மொழியாக கூறப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் பற்றி பேசக்கூடாது கோ.தளபதிக்கு பறந்த திமுக தளபதி ஆர்டர்
குறிப்பாக, மதுரை மாவட்ட மாநகர் செயலாளர் கோ.தளபதிக்கு திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு பறந்திருக்கிறது. இனி காங்கிரஸ் கட்சி பற்றியும் அதன் நிர்வாகிகள் குறித்தும் பேசவோ, விமர்சிக்கவோ கூடாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களிடமிடமும் பேசி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கூட்டணியை காக்க மெனக்கிடும் திமுக – உடைக்க நினைக்கும் சில கதர்கள்
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து திமுக விரும்பி, அதற்கான மெனக்கிடல்களை எடுத்து வரும் நிலையில், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள். இவர்களை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை உடனடியாக கண்டித்து அடக்காவிட்டால், அது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குதான் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறி வருகின்றனர்.
ராகுல் – ஸ்டாலின் நட்பு
ராகுல்காந்தி – மு.க.ஸ்டாலின் இடையே இருக்கும் நட்பு மற்றும் சகோதரத்துவம் காரணமாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் செய்யும் சேட்டைகளையெல்லாம் திமுக பொறுத்துக்கொண்டு போகிறது. ஆனால், ஒரு கட்டத்திற்குமேல் அவர்கள் வாய் நீண்டால் அதற்கு கடிவாளம் போடவும் திமுக தயங்காது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















