TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், IPS படித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு போட்டியாக ஒரு IAS-ஐ களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, அக்கட்சியின் சீனியர்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அவரை மாற்ற மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தேர்வு செய்ய உள்ளது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
IPS-க்கு போட்டியாக IAS-ஐ களமிறக்க காங்கிரஸ் திட்டம்.?
தமிழ்நாட்டில் எப்படி திமுக, அதிமுகவோ, அதுபோல, இந்திய அளவில் காங்கிரஸ்-பாஜக தான். இந்நிலையில், தமிழ்நாட்டில், பாஜக தலைவராக ஐபிஎஸ் படித்த அண்ணாமலையை களமிறக்கிய பாஜக, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டுள்ள காங்கிரஸ் மேலிடம், தற்போது ஐஏஎஸ் படித்த சசிகாந்த் செந்திலை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக்கும் முனைப்பில் இருக்கிறார்களாம். அதன் வெளிப்பாடாகவே சவுக்கு சங்கர் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கும் அதில் சிறிதும் உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது. என்ன காரணத்திற்காக, எதன் அடிப்படையில் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதே தெரியாத சீனியர்கள், அவர் மீது உள்ள அதிருப்தியை டெல்லிக்கு தெரியப்படுத்தினாலும், அங்கிருந்து நோ ரெஸ்பான்ஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு வருவதற்கு முன், மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து போன்ற வேலைகளில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்ற புகாரும் இருப்பதால், பாரம்பரியமான காந்தியவாத கட்சியை கட்டப்பஞ்சாயத்து செய்தவர் எப்படி வழிநடத்த முடியும் ? என்ற கேள்வியும் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகைக்கு எதிராக பலமுனை தாக்குதல்
இச்சூழலில் தான், பத்திரிகையாளர் சவுக்கு சங்கரும், செல்வப்பெருந்தகை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மயூரா ஜெயக்குமார் ஆகியோரின் ஆதரவுடன், மாவட்ட தலைவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் செல்வப்பெருந்தகையை நீக்கக்கோரி போர்க்கொடி தூக்கி டெல்லி சென்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தான், செல்பெருந்தகையை எப்படியாவது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று காய் நகர்த்திவருகின்றனர் கதர்சட்டை சீனியர்கள். அதாவது தமிழகத்தில் ஐபிஎஸ் படித்த அண்ணாமலையை பாஜக தலைவராக நியமித்து கட்சியின் வளர்ச்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, பாஜகவும் தமிழ் நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று திமுக அமைச்சர்களே புலம்பியிருக்கிறார்கள்.
என்னதான் தமிழ் நாட்டின் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியாக அண்ணாமலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காரணம், அவர் IPS படித்தவர் என்பதால், புள்ளிவிவரங்களோடு திமுக அரசுக்கு எதிராக பேசி வரும் சூழலில், திமுக அமைச்சர்கள் பலரும் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்கின்றனர். தற்போது இதே பார்முலாவை காங்கிரஸ் கட்சியில் செயல்படுத்த வேண்டும் என்றும் காய் நகர்த்தப்படுகிறது.
காங்கிரஸ் மேலிடத்தின் தேர்வாக சசிகாந்த் செந்தில்
அதன்படி, IAS அதிகாரியாக இருந்த திருவள்ளூர் நாடளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அப்படி அவரை நியமித்தால், கட்சியை வேகமாக தமிழ்நாட்டில் வளர்க்களாம் என்றும், அவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், புள்ளிவிவரங்களோடு பேசுவதற்கும், கட்சியில் இளைஞர்களை வேகமாக இணைப்பதற்கும் உதவும் என்று கணக்கு போட்டு, அந்த பார்முலாவை நாமும் கையில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று டெல்லிக்கு காங்கிரஸ் சீனியர்கள் தூது அனுப்புவதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம், சசிகாந்த் செந்தில் சவுக்கு சங்கரின் மைத்துனர் என்பதால், அவரை எப்படியாவது தலைவராக்க வேண்டும் என்ற முயற்சியில்தான், செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இப்படி செல்வப்பெருந்தகைக்கு எதிராக எல்லா தரப்பும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், விரைவில் சசிகாந்த் செந்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

