DMDK joined DMK alliance: திமுக கூட்டணியில் தேமுதிக..! திடீரென அப்செட் ஆன அன்புமணி- இதுதான் காரணமா.?
DMDK joined DMK alliance: தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் மாறி வருகிறது. அந்த வகையில் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்திருப்பது பாமகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- மாறும் அரசியல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தினந்தோறும் புதிய புதிய மாற்றங்களை தமிழக அரசியல் களம் கண்டு வருகிறது. கூட்டணி தொடர்பாக ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் தங்கள் அணியை பலப்படுத்த மற்ற கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைத்து வருகிறது. இதன் படி கடந்த 8 வருடங்களாக பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது திமுக, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்களில் தொடர் வெற்றியை பெற்று வெற்றி கூட்டணியாக உள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டணிக்கு சவால் கொடுக்கும் வகையில் எதிர்கட்சியாக அதிமுகவும் களம் இறங்கியுள்ளது.
கூட்டணியை வலுப்படுத்தும் அதிமுக
இதன் படி பாஜக மற்றும் பாமகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்தாக தனது எதிரியாக பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுகவையும் கூட்டணியில் இணைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி, இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த தேமுதிக, எந்த கூட்டணியில் இணையும் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் இணைத்துள்ளது தேமுதிக, இதனால் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வாக்கு வங்கி தான். ஏற்கனவே பாமகவில் அன்புமணி, ராமதாஸ் என இரு பிரிவு உள்ளது. இதில் அன்புமணி தரப்பிலான பாமக அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், இதற்கு போட்டியாக வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டு வருகிறார்.
வட மாவட்டங்களில் அன்புமணிக்கு சிக்கல்
இதனால் பாமகவின் வாக்குகள் பிரிந்து தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. எனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக வரும் பட்சத்தில் வட மாவட்டங்களில் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதங்களை கொண்ட தேமுதிகாவால் வெற்றி வாய்ப்பை எளிதாக பெற்று விடலாம் என திட்டமிட்டிருந்தார். இதனை வைத்து வாக்குகளை ஈடு கட்டி விடலாம் என அன்புமணி போட்ட திட்டம் கானல் நீராக மாறியுள்ளது. தற்போது அந்த வாய்ப்பு பறி போனதால் அன்புமணி அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே வட மாவட்டங்களில் தங்களது செல்வாக்கை விடக்கூடாது என பாமக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள அன்புமணி, களப்பணியை தீவிரப்படுத்தி வாக்குளை பாமகவிற்கு கொண்டு வரும் பணியை தொடங்கும் படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் யாருக்கு ஆதரவாக தேர்தல் களம் மாறும் என தெரிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.























