புதுச்சேரியில் 'மாஸ்டர் பிளான்' போடும் அமித்ஷா! ரங்கசாமியின் 'மாநில அந்தஸ்து' கோரிக்கைக்குப் பலன் கிடைக்குமா?
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் கூட்டணி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து முதல்வர் ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் கூட்டணி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து முதல்வர் ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூட்டணிக்குள் புகைச்சல்: பின்னணி என்ன?
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மக்களைச் சந்திக்க முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். ஆனால், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு அதிகாரிகள் பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவது முதல்வரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கடும் அதிருப்தியில் இருக்கும் முதல்வர்
அதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் பாஜக தலைவர்கள் வரிசையாக சந்தித்து சமாதானப்படுத்தி வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே சமரசம் ஏற்பட்டாலும் முதல்வருக்கு நிர்வாக ரீதியாக எந்த பிரச்னையும் இன்னும் தீரவில்லை. நிர்வாக விஷயங்களில் கவர்னர்-முதல்வர் இடையிலான மோதல் இன்னும் நீருபூத்த நெருப்பாகவே உள்ளுக்குள் இன்னும் புகைந்து கொண்டு இருக்கின்றது.
பிரதமர் மோடி புதுச்சேரி வர திட்டம்
ரங்கசாமி எதிர்பார்க்கும் பல முக்கிய கோப்புகளுக்கு அதிகாரிகளிடமிருந்து சமீபகாலமாக எந்த கிரீன் சிக்னலும் இல்லை. கோப்பு போனாலும் இறுதி முடிவு எடுக்க முடியாத அளவிற்கு விளக்கம் கேட்டு திரும்பி வந்துவிடுகின்றது. அண்மையில் கூட முதியோர் உதவித்தொகை 5௦௦ ரூபாய் உயர்விற்கான கோப்பு விளக்கம் கேட்டு அதே வேகத்தில் திரும்பி வந்தது. இதுவே ரங்கசாமியின் அதிருப்திக்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார். அப்போது புதுச்சேரி வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார். புதிய திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.
முதல்வர் ரங்கசாமியுடன் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
அதற்கு முன்பாக தேர்தல் கூட்டணி தொடர்பாக இறுதி செய்ய பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றது. பிரதமர் வருகைக்கு முன்பாக நிர்வாக சிக்கல்களை தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் எதிரொலியாக, கூட்டணி தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் எண்ணமாகவும் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதை அறிவிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை வலுவாக முன் வைத்துள்ளார் தொடர்ந்து சட்டசபை தேர்தல் கூட்டணி, வியூகங்கள் தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.
நிர்வாகச் சிக்கல்களுக்குத் தீர்வாகுமா?
மத்திய அரசின் ஒத்துழைப்பை மேடைகளில் ரங்கசாமி பாராட்டி வந்தாலும், டெல்லி சென்று இதுவரை பிரதமரை அவர் சந்திக்கவில்லை. தற்போது பிரதமரே புதுச்சேரிக்கு வரவுள்ள நிலையில், நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளை நீக்கி, தேர்தல் வியூகங்களை வகுக்க பாஜக மேலிடம் தீவிரமாக முயன்று வருகிறது. பிரதமர் வருகைக்கு முன்பாக அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் கோப்புகளுக்கான அனுமதி கிடைக்குமா என்பதைப் பொறுத்தே புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















