‘மயிலாடுதுறையில் போட்டியிட திமுக மும்முரம்’ உள்ளடியால் கதிகலங்கும் காங்கிரஸ் - யாருக்கு வாய்ப்பு?
அதிமுக- பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியை கேட்டுப் பெற பாமக திட்டமிட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் திமுக போட்டியிட்டால் கட்டாயம் வெற்றி பெறலாம் என்பது உடன்பிறப்புகளின் கணிப்பாக உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க கூட்டணிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர் தேர்வு தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் யாருக்கு வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
மயிலாடுதுறையின் சிறப்பு
காவிரி டெல்டா பகுதியில் மயிலாடுதுறை அமைந்துள்ளதால், விவசாயம் முதன்மையாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கடலோரப் பகுதிகளை கொண்டுள்ளதால் மீன்பிடி மற்றும் மீன் பதப்படுத்துதல் முக்கிய தொழில்களாக உள்ளன.
மயிலாடுதுறையை குறி வைக்கும் திமுக
இந்த பகுதியானது திமுகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது. இருந்த போதும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை 2021 சட்ட மன்ற தேர்தலிலும், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் ஒதுக்கப்பட்டதால் பல ஆண்டுகாலமாக திமுக போட்டியிடாத நிலையே உள்ளது. எனவே இந்த முறை திமுக மயிலாடுதுறையை குறிவைத்துள்ளது. அதே நேரம் காங்கிரஸ் கட்சியும் மீண்டும் மயிலாடுதுறையில் கை சின்னத்தை பதிக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
உட்கட்சி மோதலில் தகிக்கும் மயிலாடுதுறை
ஆனால் தற்போது எம்.பியாக இருக்கும் சுதாவிற்கும், எம்எல்ஏ ராஜ்குமாருக்கும் இடையே உட்கட்சி மோதல் வெளிப்படையாகவே உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், உட்கட்சி உள்ளடி வேலைகளால் தோல்வியை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. எனவே இந்த முறை மயிலாடுதுறை தொகுதியில் திமுகவே களம் இறங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. உளவுத்துறை சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும் மயிலாடுதுறையில் திமுக நேரடியாக போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெறும் என அறிக்கை கொடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக போட்டியிட்டால் யாருக்கு வாய்ப்பு?
தொகுதி பங்கீட்டில் திமுக, மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டால் யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது என்று எடுக்கப்பட்ட சர்வேயில் முன்னனியில் யார் உள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளவர்களின் பட்டியல்
இதில், முன்னாள் எம்எல்ஏவான குத்தாலம் அன்பழகன் பெயரும் அடிபடுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ள குத்தாலம் அன்பழகன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். ஆனால், இவருக்கு திமுகவுடன் இருக்கும் தொடர்பை விட பாமகவினரிடம் அதிகளவு தொடர்பு உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இவரும் மீண்டும் சீட் வாங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்தாக அருள் செல்வம் என்பவரின் பெயரும் அடிபட்டு வருகிறது. இவர் பாஜக, தேமுதிக என பல கட்சிகளுல் இருந்து மாறியவர். சில ஆண்டுகளுக்கு முன்பாக திமுகவில் இணைந்தார். இவரும் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உள்ளூர் மக்களின் செல்வாக்கு இல்லாத நிலையே இவருக்கு நீடித்து வருவதால், கட்சித் தலைமை இவர் பெயரை பரிசீலனை செய்யுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
அடுத்தாக போட்டியில் இருப்பவர் டாக்டர் சேயோன், பல ஆண்டு காலமாக திமுகவில் உள்ளார். அரசு வழக்கறிஞராக உள்ளவர், கல்வியாளராகவும் பணியாற்றி வருகிறார்.. மக்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளையும் செய்து வருவதால், உள்ளூர் மக்களின் செல்வாக்கும் சேயோனிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர் சேயோனும் தீவிரமாக முக்கிய தலைவர் ஒருவரின் ஆசியுடன் சீட் பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதி ஒருவேளை காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுகவிற்கு கிடைத்தால் குத்தாலம் அன்பழகன், அருள்செல்வம், சேயோன் ஆகியோரில் ஒருவரின் பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிக் அடிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அதிமுக- பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியை கேட்டுப் பெற பாமக திட்டமிட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் திமுக போட்டியிட்டால் கட்டாயம் வெற்றி பெறலாம் என்பது உடன்பிறப்புகளின் கணிப்பாக உள்ளது.






















