விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
சீர்காழி அருகே தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ரூ.77 லட்சம் முறைகேடு நடந்ததாகக் கூறி விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெரம்பூர் கிராமத்தில் இயங்கி வரும் "தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில்", சுமார் 77 லட்சம் ரூபாய் வரை நிதி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அந்நிறுவனத்தின் பங்குதாரர்களான விவசாயிகள் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
700 பங்குதாரர்கள் - 77 லட்சம் நிதி
பெரம்பூர் கிராமத்தை மையமாகக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' தொடங்கப்பட்டது. உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தில், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 விவசாயிகள் பங்குதாரர்களாக இணைந்தனர்.
ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் பங்குத் தொகையாக ரூ. 1,050 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான தொகை விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்டது. இது தவிர, நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக அரசு தரப்பில் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
* அரசு துவக்க நிதி: ரூ. 60 லட்சம்
* நாப்கிஷான் (Nabkisan) நிதி: ரூ. 7 லட்சம்
* உபரித் தொகை (ராஜஸ்ரீ): ரூ. 2 லட்சம்
* வட்டி வருவாய்: ரூ. 1 லட்சம் என
மொத்தமாக சுமார் 77 லட்சம் ரூபாய் நிதி நிறுவனத்தின் வசம் இருந்துள்ளது.
நான்காண்டுகளுக்குப் பின் நடந்த அவசரக் கூட்டம்
விதிமுறைப்படி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை பங்குதாரர்கள் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, வரவு-செலவு கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்தத் தமிழிசை மூவர் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்வித கூட்டமும் நடத்தப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் அவசரகதியாகக் கூட்டப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து திரளான பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வாக்குவாதம் மற்றும் வெளிநடப்பு
கூட்டம் தொடங்கிய உடனே, நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலாளரிடம் கடந்த ஐந்து ஆண்டுகால வரவு-செலவு கணக்குகளை விவசாயிகள் கேட்டனர். குறிப்பாக, அரசு வழங்கிய 60 லட்சம் ரூபாய் மற்றும் விவசாயிகளின் பங்குத் தொகை எங்கே செலவிடப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
நிர்வாகத் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும், உரிய ஆவணங்கள் இன்றி கணக்குக் காட்டப்படுவதாகவும் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். "எங்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, நிதியை முறைகேடு செய்துள்ளீர்கள்" என விவசாயிகள் ஆவேசமாக வாதிட்டனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.
விவசாயிகள் குற்றச்சாட்டு
வெளிநடப்பு செய்த விவசாயிகள் திருமண மண்டபத்தின் வாயிலில் திரண்டு நின்று, நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் கூறியதாவது:
"விவசாயிகளின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளனர். 77 லட்சம் ரூபாய் நிதியை எங்களுக்குத் தெரியாமலேயே செலவு செய்து மோசடி செய்துள்ளனர். இதற்குச் சில வேளாண் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். முறையான தணிக்கை அறிக்கை இல்லாமல் கூட்டத்தை நடத்துவது எங்களை ஏமாற்றும் செயலாகும்."
வேளாண் துறைக்கு கோரிக்கை
இந்த மோசடி புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை உயர்மட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசு வழங்கிய மானிய நிதி மற்றும் ஏழை விவசாயிகளின் பங்குத் தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் பெரம்பூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது. அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























