எல்லாம் ரெடி.. ஆனா பூட்டியே கிடக்குது! அம்ரித் பாரத் திட்டமா? ஆமை வேகத் திட்டமா? மயிலாடுதுறை ரயில் நிலையத்தை வறுத்தெடுக்கும் பயணிகள்!
மயிலாடுதுறை ரயில் நிலைய அம்ரித் பாரத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சந்திப்பு ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ரூ.22 கோடி மதிப்பீட்டிலான திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான ரயில் நிலையமாக விளங்கும் மயிலாடுதுறை சந்திப்பை நவீனமயமாக்கும் நோக்கில், மத்திய அரசின் ‘அம்ரித் பாரத்’ நிலையத் திட்டத்தின் கீழ் ரூபாய் 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த வசதிகள், நவீன உள்கட்டமைப்பு, பயணிகளுக்கான கூடுதல் சேவைகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன.
தொடக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்பணிகள், அடுத்தடுத்த மாதங்களில் தொய்வடையத் தொடங்கின. தற்போது மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், பெரும்பாலான பணிகள் முழுமை பெறாமல் இழுபறியாகவே நீடித்து வருகின்றன.
முடங்கிக் கிடக்கும் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதிகள்
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக, நவீன எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) மற்றும் லிப்ட் (மின்தூக்கி) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் பணிகள் முழுமையாக முடிவடைந்து, சோதனை ஓட்டங்களும் நிறைவடைந்துள்ளன.
இருப்பினும், இவை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மூத்த குடிமக்கள் பைகளுடன் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் அடுத்தடுத்த நடைமேடைகளுக்குச் செல்ல பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
பொதுமக்கள் அவசர காலங்களில் ரயில்களைப் பிடிக்க படிக்கட்டுகளில் ஓட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
"எல்லாம் தயாராக இருந்தும் ஏன் திறக்கவில்லை என்று தெரியவில்லை. அதிகாரிகள் யாரோ வந்து ரிப்பன் வெட்டுவதற்காகக் காத்திருக்கிறார்களா? சாதாரண மக்களின் சிரமங்களை ரயில்வே நிர்வாகம் உணர்வதில்லை" என உள்ளூர் பயணி ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
பூட்டியே கிடக்கும் குளிர்சாதன ஓய்வறை மற்றும் கழிவறைகள்
இதேபோன்று, ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே பயணிகளின் வசதிக்காக அதிநவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய (AC Lounge) ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், இதுவரையில் இதுவும் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை. இதனால், கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் பயணிகள் நடைமேடைகளிலேயே தஞ்சம் புகும் அவல நிலை நீடிக்கிறது.
மேலும், ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கழிவறைகளின் பணிகளும் அரைகுறையாக முடங்கிக் கிடக்கின்றன. பயன்பாட்டில் உள்ள பழைய கழிவறைகளும் போதிய பராமரிப்பின்றி இருப்பதால், பெண் பயணிகள் மற்றும் குழந்தைகள் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முடிவுறாத கழிவறைப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, உடனடியாகத் திறக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 ஆண்டுகளாக நீடிக்கும் 3-வது நடைமேடை இணைப்புப் பணி
மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் மிக முக்கியமான உள்கட்டமைப்புப் பணிகளில் ஒன்று, திருவாரூரில் இருந்து வரும் ரயில்களை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையுடன் (Platform No. 3) இணைப்பதாகும். இந்தத் திட்டப் பணியும் கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இன்றி முடங்கியுள்ளது.
இந்தப் பணிகள் தாமதமாவதால், திருவாரூர் மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள் வெளிச்சிக்ஞையிலேயே (Outer Signal) நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயண நேரம் வீணாவதுடன், இணைப்பு ரயில்களைப் பிடிக்க வேண்டிய பயணிகள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகின்றனர். இந்த ரயில்வே சிக்னல் மற்றும் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்குப் பின் புதிய ரயில்
மறுபுறம், மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகப் போகும் மகிழ்ச்சியான செய்தியையும் ரயில் பயணிகள் சங்கத்தினர் பகிர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மயிலாடுதுறை – பேரளம் – திருநள்ளாறு மார்க்கமாக ஆன்மீகத் தலமான வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் சேவை வருகின்ற மே 20-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரயில் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய ரயில் சேவையை மயிலாடுதுறை மாவட்ட மக்களும், ரயில் பயணிகள் சங்கத்தினரும் மனதார வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் சங்கத்தின் அவசர வேண்டுகோள்
இதுகுறித்து மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில்: "மே 20-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் இயக்கப்பட உள்ளதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகள் முடங்கிக் கிடப்பது வேதனையளிக்கிறது. புதிய ரயில் சேவை தொடங்கும் இதே நன்னாளில், தயாராக உள்ள எஸ்கலேட்டர், லிப்ட் மற்றும் குளிர்சாதன ஓய்வறையையும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விட வேண்டும். மேலும், ஆமை வேகத்தில் நடைபெறும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்த தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்தத் திட்டங்கள், இழுபறியாக நீடிக்காமல் விரைந்து பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே, புதிய ரயில்களின் வருகை முழுமையான பலனைத் தரும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















