தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் நடைபெற்ற அதிரடி 'புயல் வேட்டை'யால் 53 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு, 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை ஒடுக்கவும் மாவட்ட காவல் துறை சார்பில் கடந்த 48 மணி நேரமாக அதிரடி 'புயல் வேட்டை' (Storming Operation) நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையின் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக,
* சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் குற்றங்களைக் கண்டறிதல்.
* போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விபத்துகளைக் குறைத்தல்.
* குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
* பொது அமைதிக்குத் தொந்தரவு கொடுக்கும் பழைய குற்றவாளிகளைக் கண்காணித்தல்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது பாய்ந்த நடவடிக்கை
கடந்த மே 20 மற்றும் மே 21 ஆகிய இரு தேதிகளில் மாவட்டம் முழுவதும் தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
53 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்: சோதனையின் போது 53 பழைய குற்றவாளிகள் நேரில் தணிக்கை செய்யப்பட்டு, அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என காவல் துறையினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
தடுப்புக்காவல் சட்டம்:
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி மீது தடுப்புக்காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு
சட்டவிரோத மது விற்பனை மற்றும் குட்கா கடத்தலுக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1. குட்கா பறிமுதல்: சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 18.530 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. மதுவிலக்கு வழக்குகள்: சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 நபர்களும், பொது இடங்களில் மது அருந்தி இடையூறு செய்த 13 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. மதுபோதை வாகன ஓட்டிகள்: சாலை விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டிய 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது "மாவட்டம் முழுவதும் சமூக விரோதிகளின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரௌடிசம் மூலம் பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் பாரபட்சமின்றி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும்." எனவும் தெரிவித்துள்ளார். இந்த அதிரடி சோதனையானது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, அதே வேளையில் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























