வாட்டி வதைத்த வெயில்... திடீரென பெய்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தை குளிர்வித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவி வந்த கடும் வெப்பத்திற்குப் பிறகு, இன்று காலை முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவிவருகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயிலைப் போன்ற கடுமையான வெப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை முதல் பரவலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பெய்த இந்தத் திடீர் மழையினால் ஒட்டுமொத்த மாவட்டமும் குளிர்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை
தமிழகக் கடற்கரையொட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
குறிப்பாக, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் பிற்பகல் வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முன்னறிவிப்பை மெய்ப்பிக்கும் வகையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, பின்னர் பலத்த மழையாக உருவெடுத்தது.
வாட்டி வதைத்த வெயிலும்... இதமான மழையும்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகத் தகிக்கும் வெயில் நிலவி வந்தது. காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே நிலவிய இந்த அதீத வெப்பத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையுமோ என்ற அச்சமும் நிலவியது.
இந்தச் சூழலில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் தொடங்கிய சாரல் மழை, அடுத்த சில நிமிடங்களிலேயே பலத்த மழையாக மாறியது. மயிலாடுதுறை நகர், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருகி ஓடியது.
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பரவலான மழை
கடலோரப் பகுதியான தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருக்கடையூர், அனந்தமங்கலம், பொறையார், தில்லையாடி உள்ளிட்ட கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைப் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், இந்தத் திடீர் மழையை நனைந்தபடி ரசித்தனர். கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் அவதி
இன்று வேலை நாளாக இருந்ததால், காலையிலேயே மழை பெய்யத் தொடங்கியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றதைக் காண முடிந்தது. குடை மற்றும் மழைக்கோட்டுகளைத் தயாராக வைத்திருக்காத பொதுமக்கள், பேருந்து நிறுத்தங்களிலும், கடைகளின் ஓரங்களிலும் ஒதுங்கி நின்றனர்.
இருப்பினும், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பித்த நிம்மதி அனைவர் முகத்திலும் தெரிந்தது. அலுவலகம் செல்வோர் மழையினால் சற்று தாமதமாகத் தங்கள் பணிகளுக்குச் சென்றாலும், இதமான சூழல் நிலவுவதாகத் தெரிவித்தனர்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு
டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில், தற்போது பெய்துள்ள இந்த மழை நிலத்தடி ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். குறிப்பாகத் தென்னை மற்றும் குறுவை சாகுபடிக்குத் தயாராகி வரும் நிலங்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்.
"கடந்த சில நாட்களாக வெப்பம் தாங்க முடியாமல் பயிர்கள் வாடத் தொடங்கின. இந்தத் திடீர் மழை மண்ணின் வெப்பத்தைக் குறைத்து, பயிர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது," என்று விவசாயி ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.























