மானியங்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைக்க இந்த ஒரு விஷயம் கட்டாயம்! - மாவட்ட ஆட்சியர் தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய அடையாள எண்ணில் விடுபட்ட அனைத்து நிலங்களையும் உடனே இணைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை, ஜூலை 21: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தனித்துவமான விவசாய அடையாள எண் (Farmer ID) பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், விவசாயிகள் தங்களது பெயரில் உள்ள அனைத்து நிலங்களையும் இந்த அடையாள எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேரடிப் பட்டா உள்ள விவசாயிகளுக்கு சிறப்புப் பதிவு
வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலமாக, நேரடிப் பட்டா வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த அடையாள எண் வழங்கும் பணிகள் கிராம அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் சேவைகளை தடையின்றிப் பெறுவதற்கு இந்த அடையாள எண் மிக அவசியமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தற்போது மாவட்டத்தில் பல விவசாயிகள் விவசாய அடையாள எண்ணைப் பெற்றுள்ளனர். எனினும், ஆரம்ப கட்டப் பதிவுகளின் போது சிலர் தங்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் முழுமையாகப் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயிக்கு மூன்று வெவ்வேறு இடங்களில் நிலங்கள் அல்லது மூன்று தனித்தனி பட்டாக்கள் இருக்கும் பட்சத்தில், அவர் வசதிக்காகவோ அல்லது தவறுதலாகவோ ஒரே ஒரு பட்டாவில் உள்ள நிலத்தை மட்டும் பதிவு செய்து அடையாள எண் பெற்றிருக்கலாம்.
அவ்வாறு விடுபட்ட எஞ்சிய நிலங்களின் விவரங்களை விவசாயிகள் உடனடியாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலமாகப் பதிவு செய்து ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்." என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பதிவின் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை
விவசாயிகள் தங்களது விடுபட்ட நிலங்களின் விவரங்களைச் சேர்த்து முழுமையான அடையாள எண்ணைப் பெற பின்வரும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பட்டாக்கள்: விவசாயியின் பெயரில் உள்ள அனைத்து நிலங்களுக்கான அசல் மற்றும் நகல் பட்டா ஆவணங்கள்.
அடையாள அட்டை: [Aadhaar Redacted] (குறிப்பிடப்பட்ட ஆவணம்).
அலைபேசி எண்: மேற்கண்ட எண்ணுடன் இணைக்கப்பட்ட மற்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள நடப்பில் இருக்கும் அலைபேசி (Mobile) எண்.
இத்தகைய ஆவணங்களுடன் விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி, தங்களது விடுபட்ட நில விவரங்களை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
முழுமையான பதிவின் அவசியமும் பயன்களும்
எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய பல்வேறு அரசு உதவிகள் மற்றும் சேவைகள் அனைத்தும் இந்த அடையாள எண்ணை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக:
1. பயிர் கடன் வழங்குதல்: வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு எளிதில் பயிர்க்கடன் கிடைக்க இந்த அடையாள எண் பெரிதும் உதவும்.
2. உரம் விநியோகம்: விவசாயிகளுக்குத் தேவையான மானிய விலையிலான உரங்கள் மற்றும் இடுபொருட்கள் உரிய முறையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய இது உதவும்.
3. துரித சேவைகள்: அரசின் பேரிடர் கால நிவாரணங்கள், பயிர்க் காப்பீட்டுத் தொகைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் போன்ற சேவைகளில் எளிய முறையில் பலன்களைப் பெற இது வழிவகுக்கும்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் தங்களது முழு நில விவரங்களையும் விவசாய அடையாள எண்ணில் வெற்றிகரமாகப் பதிவு செய்து அரசின் முழுமையான சலுகைகளைப் பெற்றுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தன் செய்திக்குறிப்பின் மூலம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























