மதுவிலக்கு DSP-க்கு நேர்ந்த கொடுமை! ”திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை..” கொந்தளித்த அண்ணாமலை
அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர்.

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு என பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
டிஎஸ்பி கார் பறிமுதல்:
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் காரை திடீரென மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் நடந்தே பணிக்கு டிஎஸ்பி சென்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அண்ணாமலை கண்டனம்:
இந்த சம்பவம் குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்து பதிவிட்டுள்ளார், இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி திரு. சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
700 பேரை சிறைக்கு அனுப்பியவர்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் திரு. சுந்தரேசன் அவர்கள். அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர்.
பழிவாங்கும் திமுக அரசு
அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி திரு. சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) July 17, 2025
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,… pic.twitter.com/psibLSoG7J
தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது. காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டி.எஸ்.பி. திரு. சுந்தரேசன் அவர்களது அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும்.
திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காவல்துறை மறுப்பு:
இந்த நிகழ்வு குறித்து காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது, இது குறித்து வந்த செய்திக்குறிப்பில் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக இம்மாவட்டத்தில் தற்போது மதுவிலக்கு தோற்றுவிக்கப்பட்ட அமலாக்கப்பிரிவில் மாவட்டமாகும். துணைக்காவல் கண்காணிப்பாளராக திரு. சுந்தரேசன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
கடந்த 07.04.2025 முதல் TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் அலுவலக பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய அலுவலுக்காக கடந்த 11.07.2025-ந் தேதி அவர் பயன்படுத்தி வந்த TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் எடுக்கப்பட்டு, மாற்று வாகனமாக TN 51G 0616 பதிவெண் கொண்ட Bolero வாகனம் வழங்கப்பட்டது.
பின்னர் இன்று 17.07.2025-ந் தேதி மீண்டும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரேசன் என்பவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், மேற்கண்ட துணைக்காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், செய்திகளை வெளியீடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது






















