மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்ரவரி 1 -ம் தேதி மதுக்கடைகள் மூடல்; அதிர்ச்சியில் மது பிரியர்கள்..
வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை: வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்., அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை: வள்ளலார் எனும் மகாத்மா "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற உன்னதக் கருணையை உலகுக்கு உரக்கச் சொன்னவர், சமரச சுத்த சன்மார்க்க நெறியைத் தந்த திருவருட்பிரகாச வள்ளலார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மீகப் புரட்சியாளராகத் திகழ்ந்த இராமலிங்க அடிகளார், மனித நேயத்திற்கும் பசிப்பிணி ஒழிப்பிற்கும் புதிய இலக்கணம் வகுத்தவர்.
ஆன்மீகம் என்பது வெறும் வழிபாட்டுச் சடங்கு மட்டுமல்ல, அது சக உயிர்களிடம் அன்பு காட்டுவதே என்று போதித்தவர் அவர். வடலூரில் அவர் ஏற்றி வைத்த "அணையா அடுப்பு" இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியைத் தீர்த்து வருகிறது. ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து 'ஆன்ம நேய ஒருமைப்பாட்டை' வலியுறுத்திய வள்ளலார், இறைவன் ஒளியின் வடிவானவன் என்பதை 'அருட்பெருஞ்ஜோதி' தரிசனத்தின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.
அத்தகைய மகத்தான ஞானியின் நினைவு நாளைப் போற்றும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை ஒட்டி வரும் இத்தினத்தை மதுவற்ற 'உலர் தினமாக' (Dry Day) கடைபிடித்து வருகிறது. அவரது போதனைகளை மதிக்கும் விதமாகவும், பொது ஒழுக்கத்தைப் பேணும் வகையிலும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பிப்ரவரி 1-ம் தேதி அன்று மதுக்கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.
முழுமையான விற்பனைத் தடை
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வருகின்ற 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கனார் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணவும், நினைவு நாளின் புனிதத்தைப் பாதுகாக்கவும் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
* அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் (FL1).
* தனியார் உணவகங்கள் மற்றும் விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் (FL2, FL3, FL3A, FL3AA).
* பிற உரிமம் பெற்ற அனைத்து மது விற்பனை மையங்கள் மற்றும் மதுக்கூடங்கள் (FL11).
ஆட்சியரின் எச்சரிக்கை
குறிப்பிட்ட அந்த நாளில் மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவோ (மது விற்பனை தொடர்பான செயல்பாடுகள்) முற்றிலும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த தடையை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக:
* விதிமீறலில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்டப்படியான நடவடிக்கை பாயும்.
* விதிமுறைகளை மீறும் FL2/FL3 உரிமதாரர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
கண்காணிப்புப் பணிகள் தீவிரம்
இந்த "உலர் தினம்" (Dry Day) அறிவிப்பைத் தொடர்ந்து, மாவட்ட எல்லைப்பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் கலால் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பொதுமக்கள் மற்றும் மதுக்கடை உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளாரின் நினைவு நாளில் மது அருந்துவதைத் தவிர்த்து, அவரது கொள்கையான 'ஜீவகாருண்யத்தை' போற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
























