தரங்கம்பாடி: அச்சுக்கலை தந்தை சீகன்பால்கு மணிமண்டபம் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்.. தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு..
சீகன்பால்கு நினைவு அரங்கம் மற்றும் சிலை அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று தரங்கம்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், நவீன அச்சுக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் ஜெர்மனிய மிஷனரி சீகன்பால்குவின் திருவுருவச் சிலையையும், நினைவு அரங்கத்தையும் அரசு ஏற்கனவே அறிவித்த இடத்திலேயே விரைந்து அமைக்க வலியுறுத்தி, இன்று ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழும் சீகன்பால்குவும்
கடந்த 1706-ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து தரங்கம்பாடிக்கு வருகை தந்த சீகன்பால்கு, வெறும் மதப் போதகராக மட்டும் இருந்துவிடாமல், தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் அம்மொழியைக் கற்றுத் தேர்ந்தார். தமிழகத்தில் முதல் அச்சு இயந்திரத்தை நிறுவி, அச்சுக்கலை மற்றும் காகித ஆலைகளை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாக தமிழ் மொழியை உலகத் தரத்திற்கு உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தமிழறிஞருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பல தசாப்த கால கோரிக்கையாக இருந்து வந்தது.
அரசின் அறிவிப்பும் தற்போதைய சிக்கலும்
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனின் தொடர் முயற்சியால், சீகன்பால்குவின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக பொறையாரில் உள்ள தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் அருகிலேயே பொருத்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 20.12.2025 அன்று தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கலை நாட்டினார்.
இருப்பினும், அடிக்கல் நாட்டு விழாவின் போது, மாவட்ட தலைமை மீனவர் கிராமமான தரங்கம்பாடியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், இந்த மணிமண்டபத்தை கடற்கரை ஓரத்திலோ அல்லது தரங்கம்பாடி ஊருக்குள்ளோ தான் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், மாற்று இடம் குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டதால், ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் கடந்த சில மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டது.
வெடித்தது போராட்டம்
இந்நிலையில், அரசு ஏற்கனவே அறிவித்து அடிக்கல் நாட்டிய இடத்திலிருந்து மணிமண்டபத்தை மாற்றி, கடற்கரை ஓரத்திலோ அல்லது தனியார் மற்றும் திருச்சபைக்குச் சொந்தமான இடங்களிலோ அமைக்கத் திட்டமிடப்படுவதாகத் தகவல் பரவியது. இந்தச் செய்தி தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாற்று இடத்தில் அமைக்கப்படும் பட்சத்தில், அது எதிர்காலத்தில் பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்களையும், நில உரிமம் தொடர்பான நடைமுறை சிரமங்களையும் உருவாக்கும் என அஞ்சிய ஏராளமான பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர். பொறையார் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டபடி பேரணியாகப் புறப்பட்ட அவர்கள், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக் குழுவினர் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:
*இடமாற்றம் கூடாது: அரசு ஏற்கனவே தேர்வு செய்து, அமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட தாலுகா அலுவலகம் அருகிலேயே மணிமண்டபத்தை அமைக்க வேண்டும்.
*சட்டச் சிக்கல்கள்: தனியார் அல்லது திருச்சபை இடங்களில் அமைப்பது எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் பொதுமக்களின் அணுகுமுறைக்கு இடையூறாக அமையும்.
*காலக்கெடு: சீகன்பால்கு தமிழகத்திற்கு வந்து 320 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வரும் ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடித்து, நினைவு அரங்கத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விட வேண்டும்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்து
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், "சீகன்பால்கு அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு உலகளாவியது. அவருக்கு அமைக்கப்படும் மணிமண்டபம் எவ்வித அரசியல் அல்லது உள்ளூர் இழுபறியால் தடைபடக்கூடாது. அரசு ஏற்கனவே முறைப்படி ஆய்வு செய்து தேர்வு செய்த இடமே பாதுகாப்பானது. அதை விடுத்து கடற்கரை ஓரம் போன்ற பகுதிகளில் அமைத்தால் கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் கட்டிடம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, நிர்வாக வசதிமிக்க தாலுகா அலுவலகம் அருகிலேயே இதனை அமைக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
ஆர்பாட்டத்தை தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் ஒப்படைத்த போராட்டக்காரர்கள், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகவும் எச்சரித்தனர். இந்தத் திடீர் போராட்டத்தால் பொறையார் மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
























