சீர்காழியில் வாடகை காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள்! போலீஸ் அதிரடி கைது, அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்..
சீர்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து, சோதனையில் சிக்கிய மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபானங்களை காரில் கடத்தி வந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து 480 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் தீவிர வாகன சோதனை
தமிழக - புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மதுபானக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி தாலுகா வேட்டங்குடி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில் இன்று அதிகாலை சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரைக் கண்டதும் காரை ஓட்டி வந்த நபர் பதற்றமடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் காரை முழுமையாகச் சோதனை செய்யத் தீர்மானித்தனர்.
காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள்
காரின் உட்புறம் மற்றும் பின் இருக்கைகளுக்கு அடியில் சோதனை செய்தபோது, அங்கு அடுக்கடுக்காக மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவை அனைத்தும் புதுச்சேரி மாநிலத்திற்குச் சொந்தமான மதுபானங்கள் என்பது உறுதியானது. தலா 180 மி.லி அளவு கொண்ட மொத்தம் 480 மதுபான பாட்டில்கள் காரினுள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்ததை அடுத்து, போலீசார் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அம்பலமான உண்மைகள்
காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 41) என்பது தெரியவந்தது. ஓட்டுநராகப் பணிபுரியும் இவர், தனது நண்பர் ஒருவரிடமிருந்து காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு மதுபானங்களை வாங்கி, தமிழகப் பகுதிக்கு கொண்டு வந்ததும்,
குறிப்பாக ஒரு தனியார் விழா ஒன்றிற்காக இந்த மதுபானங்கள் மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டு கடத்தி வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் சண்முகம் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிக விலை என்பதால் பாண்டி மதுபானம் குறைந்த விலை என்பதால் திட்டமிட்டு கடத்தி வந்துள்ளார்.
போலீசார் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 480 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், சண்முகத்தைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, யாருடைய காரைப் பயன்படுத்தி இந்தக் கடத்தல் அரங்கேறியது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட போதிலும், குறுக்கு வழிகளில் மதுபானம் கடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
























