"ரூ.8.50 லட்சம் போச்சு... போலீஸ் நடவடிக்கை எடுக்கல!" - மயிலாடுதுறையில் கதறி அழுதபடி தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி!
அரசு வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கை இல்லாததால்,3 குழந்தைகளுக்கு தந்தையான சுரேஷ் ஆட்சியர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: அரசு வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.50 லட்சம் வரை பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த நபர் ஒருவர், அதிகாரிகளின் நடவடிக்கையின்மையைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி பணி நியமன ஆணை
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி அனிதா. கடந்த 2024-ஆம் ஆண்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறிக்கொண்ட கிரிஜா என்ற பெண், அனிதாவை அணுகியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள ‘இளநிலை உதவியாளர்’ (Junior Assistant) பணியிடத்தை அனிதாவிற்கு வாங்கித் தருவதாகக் கூறி, அதற்கு ரூ.4 லட்சம் பணம் பெற்றுள்ளார் கிரிஜா. தொடர்ந்து, ‘நேரடி பணி நியமன வாரியம்’ (Direct Recruitment Board) மூலம் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, போலி பணி நியமன ஆணையையும் அவரிடம் வழங்கியுள்ளார்.
வெளிநாட்டு வேலையைத் துறந்து வந்த கணவர்
தனது மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், வெளிநாட்டில் செய்து வந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காக சுரேஷ் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு அனிதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பணியில் சேருவதற்காகச் சென்றுள்ளார். அங்கு அதிகாரிகளிடம் ஆணையைக் காண்பித்தபோதே, அது முற்றிலும் போலியான ஆணை என்பதும், கிரிஜா என்ற பெண் தங்களை ஏமாற்றியதும் தெரியவந்து அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
40-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி மோசடி
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட கிரிஜா, சுரேஷின் மனைவியைப் போல 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டு காவல்துறையினர் கிரிஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், சில மாதங்களில் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
நீடிக்கும் அலட்சியம் - மீண்டும் ஒரு ஏமாற்றம்
கிரிஜாவிடம் கொடுத்த பணத்தை மீட்டுத் தரக் கோரி சுரேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, காவல்துறையினர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலங்கடத்தி வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் கடந்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த சுரேஷ், மீண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முடிவு செய்தார். இதற்காக மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் ரூ.4.50 லட்சம் பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவக்குமார், சுரேஷை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார்.
அதிகாரிகளின் மெத்தனப்போக்கு
மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ், இதுகுறித்து காவல் துறை சைபர் கிரைம் பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளார். இருப்பினும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அரசு வேலை ஆசைகாட்டி ரூ.4 லட்சம், வெளிநாட்டு வேலை என நம்பவைத்து ரூ.4.50 லட்சம் என மொத்தம் ரூ.8.50 லட்சத்தை இழந்து, மூன்று குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்ற சுரேஷ், பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கைக் கண்டிக்கும் வகையில், சுரேஷ் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலைத் தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், நொடிப் பொழுதில் சுதாரித்துச் செயல்பட்டு, சுரேஷின் கையில் இருந்த பெட்ரோல் கேனைப் பிடுங்கி எறிந்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவரைக் காப்பாற்றி விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























