காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுகவின் தீர்மான நகலை காங்கிரஸ் எரித்த நிலையில், பதிலடியாக திமுகவினர் ராகுல் காந்தி உருவப்பொம்மையை எரித்ததால் சீர்காழி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல், ராகுல் காந்தியின் உருவப்பொம்மை எரிப்பு மற்றும் போலீசாருடன் தள்ளுமுள்ளு என அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்களால் ஒட்டுமொத்தப் பகுதியும் பெரும் பதற்றக் களமாக மாறியுள்ளது.
காலையில் வெடித்த மோதல்: தீர்மான நகல் எரிப்பு
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் திடீர் போராட்டம் ஒன்று நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் அந்த தீர்மான நகலை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கேள்விப்பட்டு, சீர்காழி நகர திமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், காங்கிரசாருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் முழக்கமிட்டு சாடிக்கொண்டதால், அங்கு திடீரென சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். போலீசாரின் சமயோசித தலையீட்டால் காலையில் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மாலையில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்
காலையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாலை சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் மருது தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சீர்காழி நகர திமுக செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான திமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர். மாநில இளைஞரணி மாநாட்டு தீர்மான நகலை தீயிட்டு எரித்த காங்கிரஸ் நிர்வாகிகளைக் கண்டித்து, திமுகவினர் கடுமையான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ராகுல் காந்தி உருவப்பொம்மை எரிப்பு
ஆர்ப்பாட்டத்தில் போது, திமுகவினர் திடீரென காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியின் உருவப்பொம்மையை மறைத்து எடுத்து வந்து, அதற்குத் தீயிட்டுக் கொளுத்தி பிரதான சாலையில் வீசினர். தேசியத் தலைவரின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதால் அந்த இடமே மீண்டும் அதிரடி பதற்றத்திற்கு உள்ளானது. உருவப்பொம்மை எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சரவணன், காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையின் நடுவே எரிந்து கொண்டிருந்த ராகுல் காந்தியின் உருவப்பொம்மையை அணைத்து, அங்கிருந்து அகற்ற போலீசார் தீவிரமாக முயன்றனர்.
சம்பவ இடத்து பரபரப்பு
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "எங்கள் கட்சியின் மாநாட்டு நகலை எரித்தவர்களைக் கண்டிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது" எனக் கூறி போலீசாரை தடுத்தனர். இதனால் சீர்காழி காவல் ஆய்வாளருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
ஸ்தம்பித்த மயிலாடுதுறை - சிதம்பரம் நெடுஞ்சாலை
திமுகவினரின் இந்த திடீர் சாலை மறியல் மற்றும் போலீசாருடனான மோதல் காரணமாக, முக்கிய வழித்தடமான மயிலாடுதுறை - சிதம்பரம் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, போலீசார் அதிரடியாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, எரியூட்டப்பட்ட உருவப்பொம்மையின் பாகங்கள் அகற்றப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
தொடரும் பதற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
திமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின், தலைவர்களின் நகல்களும் உருவப்பொம்மைகளும் அடுத்தடுத்து எரிக்கப்பட்ட இந்த அசாதாரண சம்பவங்கள் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், முக்கியச் சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் இந்த மோதல் போக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















