மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்: அரசு மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு..!
அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன் படுத்தாத மீனவர்கள் என இருதரப்பு மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழில்
தமிழகத்தின் கடைசி 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமும், மீன்பிடி தொழிலும் இருந்து வருகிறது. மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. அதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் இக்கிராமத்தினர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக தீர்வு எட்டப்படாத நிலை மீனவர்கள்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்வளத்தை பாதிக்கும் வகையில் ஒரு சில கிராமங்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடை செய்ய வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவர் கிராமான தரங்கம்பாடி தலைமையில் கடந்த காலங்களில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கான இன்றளவும் தீர்வு என்பது எட்டப்படாத நிலையில் இருந்து வருகிறது.
பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
இந்நிலையில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜின் ஆகியவற்றை பயன்படுத்தி, சட்ட விரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராமுகம் காட்டும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி தலைமையில் சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், மாணிக்கபங்கு பெருமாள்பேட்டை, வெள்ளகோயில், சின்ன மேடு, சின்னங்குடி, வானகிரி உள்ளிட்ட பெரும்பாலான மீனவ கிராமத்தினர் இன்று ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொழில் மறியல் செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டு
தரங்கம்பாடி கடைவீதியில் டெண்ட் அமைத்து சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு தடையை மீறி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மதிக்காமல் பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராமத்தினர் சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தென போக்கில் செயல்படுவதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் கிராமங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த மீனவர்கள் பிரச்சினை என்பது மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.






















