அடுத்து அடுத்து 4 பேர் தீக்குளிக்க முயற்சி... மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு சம்பவம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தந்தை, மகன் மற்றும் தாய், மகள் தற்கொலைக்கு முயன்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தந்தை, மகன் மற்றும் பெட்ரோலுடன் வந்த தாய், மகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தீக்குளிக்க முயன்ற தந்தை மகன்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த தரங்கம்பாடி வட்டம் கஞ்சாநகரம் பொன்னுகுடி கிராமத்தை சோ்ந்த 80 வயதான தாவீது, அவரது மகன் 40 வயதான பில்டன் புனிதராஜ் ஆகிய இருவரும் திடீரென தாங்கள் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை எடுத்து தங்கள் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவா்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.

காவல்துறையினர் விசாரணை
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆதிதிராவிடர் நலத்துறையால் அவா்களுக்கு வழங்கப்பட்ட மனைக்கு பட்டா வழங்காமல், வேறு நபருக்கு மாற்ற வருவாய்த் துறையினர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டை தெரிவித்த அவர்கள் இதன்காரணமாக தாங்கள் உரிய நடவடிக்கை வேண்டி இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார். இதனை அடுத்து, மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி அவர்கள் இருவரும் வைக்கப்பட்டனர்.

தாய், மகள் தற்கொலை முயற்சி
இதேபோன்று, பெற்ற மகன் வீட்டை அபகரித்துக்கொண்டு தங்களை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறி தாய், மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்துள்ளனர். இதனை அறிந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடிங்கினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த 70 வயதான அம்சவள்ளி என்பதும், இவரது கணவா் கோவிந்தராஜ் இறந்தவிட்ட நிலையில், அம்சவள்ளி அவரது மகள் உஷா இருவரும் வசித்துவந்த வீட்டை அம்சவள்ளியின் மகன் பாஸ்கர் அபகரித்துக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகவும், தங்கள் வீட்டை மீட்டுத்தரக்கோரி இருவரும் தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, காவல்துறையினர் அவா்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் மீது புகார்
மேலும், குத்தாலம் வட்டம், வில்லியநல்லூரை சோ்ந்த பிரேமா மேக்கிரிமங்கலம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரிந்த தனது கணவா் சண்முகம் கடந்த 2023 ஜனவரி 6-ஆம் தேதி தான் வெளியூா் சென்றிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சந்தேகிக்கும் நபா்கள் குறித்த விவரங்களுடன் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் 2 ஆண்டுகளைக் கடந்தும் இது தொடர்பாக காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






















