மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
மயிலாடுதுறையில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மாபெரும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஒரு சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் (NAPS) மாபெரும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (Apprenticeship Mela) நடைபெற உள்ளது.
வருகிற 20.07.2026 (திங்கள்கிழமை) காலை 09.00 மணியளவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) இந்த முகாம் துவங்குகிறது. இம்முகாமில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து, அரசு மற்றும் முன்னனி தனியார் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முகாமில் பங்கேற்கும் முன்னணி நிறுவனங்கள்
இளைஞர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துத் தரும் வகையில், இம்முகாமில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருக்கின்றன.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
* தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)
* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் (TANGEDCO)
* ஆவின் (Aavin) மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC)
தனியார் நிறுவனங்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் முன்னணி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) இம்முகாமில் நேரடியாகக் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான மனிதவளத்தைத் தேர்வு செய்யவுள்ளன.
கல்வித் தகுதிகள் மற்றும் தேர்வு முறைகள்
தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்கள் மட்டுமின்றி, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் பிரிவினர் : ITI, டிப்ளமோ (Diploma), B.E, மற்றும் இதர பட்டப்படிப்புகள் (Degree) நேரடியாகத் தொழிற்பழகுநர் (Apprenticeship) பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
புதியவர்கள் (Fresher Apprentice) : 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி. தொழிற்சாலைகளில் நேரடியாகச் சேர்க்கப்பட்டு, 3 முதல் 6 மாத கால அடிப்படைப் பயிற்சியும், 1 முதல் 2 ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் வழங்கப்படும்.
கைகொடுக்கும் உதவித்தொகை மற்றும் தேசிய சான்றிதழ்
இப்பயிற்சி காலத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, தற்காலிக ஊக்கத்தொகையாக (Stipend) மாதம் ரூ. 6,800/- முதல் ரூ. 12,300/- வரை அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு மத்திய அரசின் "தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்" (National Apprenticeship Certificate - NAC) வழங்கப்படும். இச்சான்றிதழைப் பெறுவதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்.
* தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை.
* இந்தியாவின் முன்னணி பெருநிறுவனங்களில் (Corporate Companies) நேரடி வேலைவாய்ப்பு. * சர்வதேச தரத்திலான பயிற்சி என்பதால், அயல்நாடுகளுக்குச் சென்று பணிபுரிவதற்கான பிரகாசமான வாய்ப்புகள்.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் மற்றும் தொடர்பு எண்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைய தலைமுறையினர், தங்களின் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை என்ற முகவரியையோ அல்லது 9499055725 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























