திரு ஆபாரணங்கள் அணிந்துகொண்டு, திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம்....!
தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டினப் பிரவேசம் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
தருமபுரம் ஆதீன வைகாசி பெருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா, கருத்தங்கம், சமயப்பயிற்சி வகுப்பு, திருநெறிய தெய்வத்தமிழ்மாநாடு, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வைகாசி மாதத்தில் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 10 -ம் திருநாளில் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்தியான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழாவும், 11 -ம் திருநாள் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம்.

பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு நீங்கிய தடை
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கர்த்தரை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிசென்று ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வருவார். அதனைத் தொடர்ந்து ஆதீன கர்த்தர் ஞானகொலுக்காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்குவது வழக்கம். இந்நிலையில் மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதித்தார். அதன்பிறகு பல்வேறு இந்து அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்ததை அடுத்து அரசு அந்த தடையை நீக்கியது.

பிரபலமான பட்டினப் பிரவேசம்
இதனால் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி பிரபலமானது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி கோலாகளமாக நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18-ம் தேதி கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நடந்தது. அதனை தொடர்ந்து 19 -ம் தேதி நடைபெற்ற குரு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாதர்பூஜை, குருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்து வழிபட்டார். மாலையில் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், தூர்க்கை அம்மன் கோயில் மற்றும் மேலகுருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

சிவிகை பல்லக்கில் எழுந்தருளிய ஆதீன கர்த்தர்
பின்னர் இரவு 10 மணியளவில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திரு ஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். ஆதீன நான்கு வீதிகளிலும் பூர்ணகும்ப மரியாதையுடன் பக்தர்கள் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 27 வது குருமகா சந்நிதானம் ஞானகொலுக்காட்சியில் எழுந்தருள திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதிதம்பிரான் சுவாமிகள் பாவான அபிஷேகம் செய்துவைத்து மகாதீபாராதனை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குருமகா சந்நிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பங்கேற்ற பல்வேறு ஆதீனங்கள்
இந்த நிகழ்வில்,மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், நாச்சியார்கோயில் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவசுப்ரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் 234-வது குருமகா சந்நிதானம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி இளைய ஆதீனம் அஜபா நடேஸ்வர சுவாமிகள், திண்டுக்கல் ஸ்ரீசிவபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.






















