"மாடு வளர்க்க லோன் வேணும் ஐயா" இருக்கையில் இருந்து இறங்கி வந்த கலெக்டர் - அடுத்து நடந்தது என்ன?
இரண்டரை அடி உயர மாற்றுத்திறனாளி தனது வாழ்வாதாரம் காக்க வங்கி கடன் பெற்றுத்தர கோரி அளித்த மனுவினை இருக்கையில் இருந்து இறங்கிவந்து பெற்ற ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து 286 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்களின் விபரம்
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 28, மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 20 மனுக்களும், ஆக்ரமணம் அகற்ற கோரி 06, முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 20 மனுக்களும், பல்வேறு புகார்கள் தொடர்பாக மனுக்கள் 13 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 28 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 38 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நில பிரச்சனை தொடர்பாக 06 மனுக்களும், கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 33 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 15 மனுக்களும், இலவச கான்கிரீட் வீடு வேண் 12, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக 09, குடும்ப அட்டை தொடர்பாக 02, சட்டம் ஒழுங்கு தொடர்பாக 01, தொழிலாளர் நலன் தொடர்பாக 01, மது விற்பனை செய்து திருந்தி வாழ்வோர் மறு வாழ்வு உதவி 01, குவாரி தொடர்பாக 01, மருத்துவ காப்பீடு தொடர்பாக 02, வங்கி சேவை தொடர்பான மனுக்கள் 06, மற்றும் இதர கோரிக்கை தொடர்பான மனுக்கள் 37 என மொத்தம் 286 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
மேலும் இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு, ரூ.6552 மதிப்பில் சலவை பெட்டியினையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு தலா ரூபாய் 25,000 வீதம், இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 50 ஆயிரம் என 10 பயனாளிகளுக்கு மொத்தம் 5 லட்சம் மதிப்பில் வைப்புத் தொகை ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு சீர் மரபினர் நல வாரியம் புதிய அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார்.

இரண்டரை அடி உயர மாற்றுத்திறனாளி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கீழஅக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதாகும் பாலாஜி. இரண்டரை அடி உயர மாற்றுத்திறனாளியான இவருக்கு அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. அந்த இடத்தில் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட பிரதம மந்திரியின் கடனுதவி திட்டத்தில் கடன் பெற அவர் வங்கிகளை அணுகியுள்ளார். ஆனால் அவருக்கு கடன் வழங்காமல் கடந்த மூன்று மாதங்களாக அலைக்கழித்துள்ளனர்.

ஆட்சியர் உத்தரவு
இதனை அடுத்து வங்கி கடன் உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டு வலியுறுத்தி தன்னம்பிக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் படிகளில் ஏறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மனு அளிக்க தனது நண்பரின் துணையுடன் வந்த அவரை கண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் உடனடியாக தனது இருக்கையில் இருந்து கீழே இறங்கி, மாற்றுத்திறனாளி பாலாஜியிடம் அருகில் வந்து குறையை கேட்டு, அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு டிக் லோன் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






















